லடாக்கில் வீரமரணமடைந்த கருப்பசாமி.. குடும்பத்தாரை சந்தித்த போது கதறி அழுத அமைச்சர் கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உயிரிழந்த கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வந்து, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது அமைச்சர் கண்கலங்கினார்.
Recommended Video
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வீரமரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வந்து, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
பங்கேற்றவர்கள் விவரம்
ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் விஜயா, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராணுவ வீரர்
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி லடாக் பகுதியில் நடந்த விபத்தில் வீரமரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தகவல் அறிந்தவுடன் தமிழக முதல்வர் என்னை தொடர்புகொண்டு கருப்புசாமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் படி தெரிவித்தார்.
முழு அறிக்கை
மேலும், ராணுவத்திலிருந்து முழு அறிக்கை பெற்றவுடன், கருப்பசாமி குடும்பத்துக்கான நிவாரணத்தையும், குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சலுகைகளையும் அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கருப்பசாமி மனைவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க முதல்வரிடம் வலியுறுத்தி நிச்சயமாக வேலையை பெற்று தருவேன்.
அழுத அமைச்சர்
அவர்களின் குழந்தைகளுக்கு அரசு செய்யும் உதவிகளை தவிர்த்து எனது சொந்த பொறுப்பில் அந்த குடும்பத்துக்கு நான் உதவிகளை செய்வேன் என்றார் அவர். ஆறுதல் தெரிவிக்க போன இடத்தில் அந்த குடும்பத்தினர் அழுததை கண்ட அமைச்சரும் கண் கலங்கி வெதும்பினார்.