ஸ்டாலின் புலம்ப ஆரம்பிச்சிட்டார்.. வாழ்க்கை பூராவும் கனவு காண வேண்டியதுதான்.. கடம்பூர் ராஜு அட்டாக்
திமுக தலைவரை விமர்சித்து பேசினார் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: "ஸ்டாலின் எங்களுக்கு கத்துக்குட்டி...வாழ்நாள் முழுக்க அவர் முதல்வர் கனவு காண வேண்டியதுதான்.. திமுகவினரை வேலை வாங்குவதற்காக அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அடுத்த ஆட்சி தாங்கள்தான் என்று சொல்லி வருகிறாரே தவிர, திமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.. அதனால்தான் அவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்" என்று திமுக தலைவரை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் அம்மா மினி கிளினிக் நலத்திட்டங்களை மற்றும் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பலோடை கொளத்தூர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று வழங்கினார்.
அதேபோல, ஓட்டப்பிடாரம் தொகுதி கே.கைலாசபுரத்தில் அம்மா மினி கிளினிக்கையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தருவைகுளத்தைச் சார்ந்த அந்தோணி மைக்கேல் என்பவரது படகில் மீன்பிடிக்க சென்ற ஏழு பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் அறிந்ததும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து அவர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். தற்போது அங்கு கரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்" என்றார்.
இன்னும் 5 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று முக ஸ்டாலின் தெரிவித்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அமைச்சர், "அவர் வாழ்நாள் முழுவதும் கனவு காண வேண்டிய தான். திமுகவினரை வேலை வாங்குவதற்காக அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஸ்டாலின் அவ்வாறு கூறி வருகிறார். திமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதால் அவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.. அதனால்தான், ஆட்சி மாற்றம் என்று பேசி வருகிறார்.
ஆனால், இந்த 2021 தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் கிடையாது.. அது ஆட்சி தொடர்வதற்கான தேர்தல். ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக நாங்களும் நினைக்கவில்லை மக்களும் நினைக்கவில்லை.. ஏனென்றால், திமுக தலைவர் கருணாநிதியின் பிரச்சாரத்தை எதிர்கொண்டு 10 தேர்தல்களில் நாங்கள் ஏழு முறை ஆட்சிக்கு வந்துள்ளோம்.
ஆனால், திமுகவோ வெறும் 3 முறைதான் ஆட்சிக்கு வந்தது... அதனால், ஸ்டாலின் எங்களுக்கு கத்துக்குட்டி... ஸ்டாலின் தலைமை ஏற்று இப்போது தான் தேர்தலை சந்திக்கிறார்கள்... ஸ்டாலினுடைய பிரச்சாரமும் எங்களுக்கு பெரிசு கிடையாது.. அதுஒரு பொருட்டே இல்லை கவலைப்படுவதற்கு" எஎன்றார் அவர்.