நானே போட்டியிடுவதாக அர்த்தம்.. தங்கைக்காக தழுதழுத்த ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அத்தொகுதி, லோக்சபா வேட்பாளர் கனிமொழி குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் சகோதரி கனிமொழி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கனிமொழிக்கு, திமுக தலைமை முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தல் பணியாற்றாது என்று என்று ஒரு தகவல் தூத்துக்குடி களத்தில் சில கட்சிகளால், பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு அமைந்திருந்தது. அதுகுறித்து நீங்களே பாருங்கள்.
தேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்... நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்... முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
என்னை நானே அறிமுகம்
'கலைஞர்' பிறந்த மண்ணில் இருந்து என்னுடைய தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினேன். இன்று, 'கலைஞரின்' மகள் போட்டியிடக்கூடிய தூத்துக்குடிக்கு நான் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், அவர்கள் அத்தனை பேரும் 'கலைஞரின்' பிள்ளைகள்தான் என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால், இப்போது 'கலைஞருடைய' பிள்ளையே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். கனிமொழியை நான் அறிமுகம் செய்யும்போது 'கலைஞரை' அறிமுகம் செய்வது போல பொருத்தமாக இருக்கும். கனிமொழியை அறிமுகம் செய்யும் போது, என்னை நானே உங்களிடம் அறிமுகம் செய்து கொள்வதை போன்றது.
கருணாநிதியே போட்டியிடுகிறார்
திமுக கூட்டணியின் சார்பாக கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். நிறுத்தப்பட்டு உள்ளார் என்று சொல்வதைவிட, உங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். அவர் போட்டியிடுகிறார் என்று சொன்னால் 'கலைஞரே' போட்டியிடுகிறார் என்று அர்த்தம். ஏன்.. நானே போட்டியிடுகிறேன் என்று பொருள். அதை உணர்ந்து நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும்.
கனிமொழி திறமைகள்
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கு ஏற்ப. 'கலைஞருடைய' மகள் கவிதை எழுதுவார் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றே கிடையாது. கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக.. இப்படி படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து, இன்று ஒரு சிறப்புக்குரிய இடத்தைப் பெற்றுள்ளவராக அவர் வளர்ந்து வந்துள்ளார். இவை அனைத்தையும் தாண்டி, சமூகப் போராளியாக வளர்ந்துள்ளார். நாடாளுமன்ற புலி என்ற பட்டத்தையும் கனிமொழி பெற்றுள்ளார். இப்போது தூத்துக்குடிக்கு, ஒரு புலியாக உங்களுக்கு கிடைத்துள்ளார்.
மக்கள் பணிகள்
மாநிலங்களவையில் கனிமொழி ஆற்றி இருக்கக்கூடிய பணிகளை இங்கு நான் எடுத்துச் சொன்னால் உள்ளபடியே நேரம் போதாது. இருப்பினும் சில செய்திகளை தலைப்பு செய்திகளாக உங்களுக்கு அடையாளம் காட்ட விரும்புகிறேன். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, நீட் தேர்வில் விலக்கு, மரண தண்டனை விவகாரம், பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படும் கொடுமை, குலசேகரன்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு தமிழர் நலன் இப்படி ஏராளமான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் வாதாடி போராடி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் அப்படிப்பட்ட ஒருவர் தான் உங்களுக்கு இன்று வேட்பாளராக கிடைத்துள்ளார் இவரை விட ஒரு சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அப்போது, கனிமொழி மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார்.