சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவலின் போது இறந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது.
சாத்தான்குளம் தைக்கா தெருவில் வசிப்பவர் மார்ட்டின். இவர் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 294 (b), 506(2) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சேவியர், உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் மார்ட்டினை அவரது வீட்டில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றி சென்றதாக கூறப்டுகிறது.
பின்னர் சாத்தான்குளம் காவலர் குடியிருப்புக்கு கொண்டு சென்று இரவு முழுவதும் அவரை அடித்தார்களாம். பலத்த காயமடைந்ததால், மார்ட்டின் உடல்நிலை மோசமானதை அடுத்து, 24 ஆம் தேதி பிற்பகலில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மார்டின் அனுமதிக்கப்பட்டார்.
இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாள் வசித்த தாய்.. சென்னை திருநின்றவூரில் அதிர்ச்சி
மிரட்டும் போலீஸ்
கடந்த 5 நாட்கள் சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாம். நேற்று இரவு 7 மணியளவில் மார்ட்டினை ஆஜர்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரித்து பதிவு செய்த திருவைகுண்டம் குற்றவியல் நீதித் துறை நடுவர் , மார்ட்டினை சொந்த பிணையில் விடுவித்தார். இந்த விவகாரத்தில் தற்போது வரை மார்ட்டின் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாக்குமூலம்
பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் இது பற்றி பேசிய மார்டின் "கடந்த ஆறு நாட்களாக என்னை போலீஸ் ஸ்டேசனில் சட்டவிரோதமாக வைத்து சித்திரவதை செய்தார்கள் அதன்பின்னர் என்னை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினார்கள். என் வழக்கறிஞர் முறையிட்ட பின்னர்தான் விடுவிக்கப்பட்டேன் என்று மார்ட்டின் கூறினார்.
நீதி கிடைக்க வேண்டும்
இதற்கிடையில் மார்ட்டினின் மனைவி சரோஜா இது பற்றி கூறும் போது , விசாரணைக்கு அழைத்து சென்று என் கணவரை, அடிச்சு சித்திரவதை செய்தார்கள். அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். என் கணவரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மாதிரி ஆகிவிடக் கூடாது என்று கதறினார். மார்டினை சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே என்ன காரணத்திற்காக அவரை போலீசார் கைது செய்தார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
ஜெயராஜ் பென்னிக்ஸ்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட பின்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள தவறுகளையும், சந்தேக நபர்களுக்கு உள்ள உரிமைகளை போலீசார் கொஞ்சமும் உணராமல் இருந்ததையும் அச்சம்பவம் அம்பலப்படுத்தியது.
ஊரடங்கு காலத்தில் செல்போன் கடையை அதிக நேரம் திறந்து வைத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்ட தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் ஜூன் 23 அன்று கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையில் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளால் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
5 போலீஸ்காரர்கள்
இந்த சம்பவம் நாடு தழுவிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைத்தது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.