புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் பக்தர்கள் குளிக்க தடை
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்
தூத்துக்குடி: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் இன்றும் புத்தாண்டு தினமான நாளையும் திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கலியுக தெய்வமான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு ஐப்பசி மாதம் நடைபெறும் சூரசம்ஹார திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதைப் போல், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தென் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.
தற்போது மார்கழி மாதம் என்பதால், தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. பக்தர்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக, புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் காவடி எடுத்துக்கொண்டு வந்தும் சுவாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு பின்னர், சுப்ரமணிய சுவாமியை தரிசிப்பதுண்டு.
தற்போது கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதை அடுத்து, இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்ததாக வதந்தி பரவியது. இதனால், பீதியடைந்த பாதயாத்திரை பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் அனுமதி பெற்று, வழக்கமாக டிசம்பர் 27ஆம் தேதி அன்று பாதயாத்திரையை தொடங்குவதற்கு பதிலாக இரண்டு நாட்கள் முன்னதாகவே பாதயாத்திரை தொடங்கி 29ஆம் தேதியன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சூரசம்ஹாரமும் கந்த சஷ்டி புராண கதையும்
தற்போது, ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தினமும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இன்றும் புத்தாண்டு தினமான நாளையும் பக்தர்கள் கடற்கரைக்கு செல்லவும், கடலில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசன தீபாராதனையும், அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும். பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், என்றும் தெரிவித்துள்ளது.