தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல்
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல் தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நினைக்கிறார். பிரதமரின் எண்ணமும் செயலும் தவறானது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழகத்தை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி வந்த ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் மோடி நாட்டிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
நாட்டில் பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை இருக்கிறது. தமிழ் மொழிக்கு உன்னதமான கலாச்சாரம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாகரீகம் என தெரிவித்து வருகிறார்.
நரேந்திர மோடி தமிழ் நாட்டின் வரலாற்றை இந்தியாவின் வரலாறாக பார்க்கவில்லையா? தமிழின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை இந்தியாவின் பாரம்பரியமாக பார்க்கவில்லையா? ஒரு கருத்து இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்தக் கருத்தை நமக்கு தேவையில்லை என்றார் ராகுல்காந்தி.
ஜனநாயகம் இறந்துவிட்டது.. நாட்டின் நலனில் பிரதமர் சமரசம் - ராகுல் காரசார விமர்சனம்
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நினைக்கிறார். பிரதமரின் எண்ணமும் செயலும் தவறானது. தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.
தமிழகத்தை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நல்ல அரசையும் மக்களுக்கு நல்லதை செய்யும் அரசையும் கொண்டு வர நாம் நினைக்கிறோம். அரசு தொழிலாளர்களை விவசாயிகளை சிறு குறு வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.