தூத்துக்குடியில் கனிமொழி அல்ல.. ஸ்டாலினே நின்றாலும் வெல்வேன்… தமிழிசை
தூத்துக்குடி: கனிமொழி அல்ல; ஸ்டாலினே இங்கு போட்டியிட்டாலும், என்னை வெற்றி பெற வைக்க தூத்துக்குடி மக்கள் முடிவு செய்து விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி தொகுதி அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேருக்கு, நேர் மோதுகின்றனர். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: பொதுவாக கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பு தான் என்று கூறினார். முதலில் நான் தூத்துக்குடி மண்ணின் மகள். எங்கிருந்தோ ஏற்றுமதி செய்யப்பட்டு, இங்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நான் அல்ல என்றும் என் குடும்பம், பாரம்பரியம், உறவின்முறை ஊருக்கே தெரியும் எனவும், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக, போட்டியிடுவதாகவும் தமிழிசை விளக்கம் அளித்தார்.
தமிழிசையை சரித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. சாதிக்காக இங்கு போட்டியிடவில்லை என்றும், மக்களுக்கு சேவை செய்து சாதிக்க வேண்டும் என்பதற்காவே போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் துரதிஷ்டவசமானது, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்ததும் அதனை திறந்து வைத்ததும் யார் என்று மக்களுக்கு தெளிவாக தெரியும் என்றார்.
வைகோ திமுகவில் இருந்து விலகிய போது அவருக்காக எத்தனை இளைஞர்கள் கொடூரமாக தீக்குளித்து இறந்தார்கள் என்பதை இப்போது இருப்பவர்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, தன்மானத் தமிழர்கள், உண்மையான தொண்டர்கள், வைகோவின் அரசியல் நாடகத்தை உணரவேண்டும் என்றும் கூறினார்.
தேர்தலுக்கு தேர்தல் மாறி, மாறி பேசும் வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்கவா கட்சி ஆரம்பித்தார் என்றும், சொந்த தொகுதியில் போட்டியிடும் துணிச்சல் வைகோவுக்கு கிடையாது என்றும் பேசினார்.
தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்கவே முடியாது என்பது, கமல்ஹாசன், சீமானுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தேர்தல் களத்தில் அவர்கள் போட்டியிடவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.