'மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில்'.. சாத்தான்குளம் இரட்டை படுகொலை ஓர் ஆண்டு.. கனிமொழி நேரில் ஆறுதல்
தூத்துக்குடி: போலீஸ் வன்முறை காரணமாக சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்து ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார்.
கடந்த ஆண்டு கொரோனா பொருந்தொற்றின் முதல் அலை நாட்டில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கடந்த மார்ச் இறுதி வாரம் மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்திருந்தது.
அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இதுபோல பல மறக்க முடியாத துயர சம்பவங்கள் கொரோனா முதல் அலை சமயத்தில் ஏற்பட்டது.
சாத்தான்குளம் சம்பவம்
அப்படி மற்ற முடியாத, போலீஸ் வன்முறையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு சம்பவம்தான் சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கடையை அடைப்பது குறித்து ஜெயராஜுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் தாக்குதல்
இதனால் விசாரணைக்காக ஜெயராஜை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து தந்தையைத் தேடி பென்னிக்ஸுகும் போலீஸ் நிலையத்திற்குச் சென்றார். அன்று இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைத்தே இருவரையும் போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு
கோவில்பட்டி சிறையில் கடந்த 22ஆம் தேதி இரவு பென்னிக்ஸும், 23ஆம் தேதி அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. தேசிய அளவில் பலரும் இந்தச் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். தடயங்கள் அழிக்கப்படாமல் இருக்கக் காவல் நிலையம் தாசில்தார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
வழக்கு விசாரணை
தந்தை-மகன் கைது செய்யப்பட்ட போது அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக அளித்த வாக்குமூலமே குற்றவாளிகளைச் சிக்க வைத்து. இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பால கிருஷ்ணன் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரில் ஆறுதல்
இந்தச் சம்பவத்தில் தொடக்கம் முதலே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவர் கனிமொழி எம்பி. இந்த இரட்டை படுகொலை சம்பவம் தேசிய அளவில் மிகப் பெரிய பேசுபொருளாவதில் கனிமொழியின் பங்கு முக்கியமானது. சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு முடிந்துள்ள நிலையில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினரைக் கனிமொழி இன்று நேரில் சந்தித்தார்.
கனிமொழி எம்பி
இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் வைராகியத்தோடு எதிர்கொள்ளும் தாய்களை சந்தித்து ஆறுதலும் உறுதியும் சொன்னேன்" எனப் பதிவிட்டுள்ளார்.