பாகிஸ்தானிலிருந்து வந்த ஹெராயின்.. தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை படகு.. பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த படகை மடக்கி நிறுத்திய இந்திய கடலோர காவல் படையினர் அதிலிருந்து 100 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். படகில் வந்த இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
படகில் இருந்த போதை மருந்து பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை நாட்டு படகில் கொண்டுவரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் பிடிபட்டவர்கள்.
இந்த படகில் போதை மருந்துகள் மட்டுமின்றி 9mm பிஸ்டல்கள் ஐந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாட்டிலைட் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 6 பேரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பல துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் தீவிரவாதிகளை மட்டுமின்றி போதை மருந்தையும் பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் கடத்தி வருகிறது. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு பணம் திரட்டுவது அவர்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.