தூத்துக்குடியில் கனிமொழிக்கு இப்படியும் நெருக்கடி.. பெரியார் போட்டோ திடீர் மாயம் ஏன்?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக சார்பில் களமிறங்கியுள்ளார் அக்கட்சி மகளிரணி செயலாளர் கனிமொழி. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களிலும் சபை கூட்டங்களில் பங்கேற்று அவர் மக்களுடன் கலந்துரையாடி வந்தார்.
இந்த நிலையில்தான், கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் அக்கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். எனவே போட்டி வலுவாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான், கனிமொழி இதற்கு முன்பாக கோவில் உண்டியலுக்கு காவலாளி எதற்கு என கேட்டது உள்ளிட்ட பல்வேறு மதரீதியிலான பேச்சுக்களை வீடியோக்களாக்கி பாஜக ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றவிட்டுள்ளனர்.
கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. 'கதறும்' தேர்தல் களம்
இந்துக்களுக்கு எதிரானவர் கனிமொழி என்பதால், தமிழிசையை தேர்ந்தெடுங்கள் என பிரச்சாரம் ஜோராக போய்க்கொண்டுள்ளது. தமிழகம் முழுக்கவே திமுகவுக்கு எதிராக இப்படி ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனவேதான், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியில்லை என ஒன்றுக்கு பலமுறை ஸ்டாலின் தனது பேட்டிகளில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி தொகுதியில், இந்த பிரச்சாரம் இன்னும் அதிகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான், கனிமொழி ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக இருந்த கைத்தடியுடன் கூடிய பெரியார் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இப்போது அந்த இடம் காலியாக உள்ளது. நாத்தீகம் பேசுபவர் என்ற வட்டத்திலிருந்து விடுபட கனிமொழி முயல்கிறாரா? தூத்துக்குடி களம் அதற்கான நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளதா என்ற கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள்.