10 மாத கைகுழந்தை.. 3 மாத கர்ப்பிணி மனைவி.. பரிதவிக்கும் போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பம்
தூத்துக்குடி: வல்லநாட்டில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பம் அவரை இழந்து பரிதவிக்கிறது. அவரது மனைவியின் வயிற்றிலோ மூன்று மாத சிசு உள்ளது. இதேபோல் அவரது மகன் பிறந்த 10 மாதத்தில் தந்தையை இழந்துள்ளான். நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்ட போது மனைவி குழந்தையுடன் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உருக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுத்து (30). இவர் மீது 4 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ஜாமீனில் வெளிவந்த இவர், தனது கூட்டாளிகளுடன் வல்லநாடுஅருகே மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து டிஸ்பி வெங்கடேசன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர்.
"என்ன பாய்".. பாசத்துடன் அழைத்து மகிழ்ந்த கருணாநிதி.. மறைந்து போனதே அந்த "இடி, மின்னல், மழை"!
குற்றவாளியும் பலி
அப்போது நாட்டு வெடிகுண்டை துரைமுத்து வீசியுள்ளார். இந்த குண்டு போலீஸ்காரர் சுப்பிரமணியனின் மீது வெடித்தது. இதில் சுப்பிரமணியன் தலை சிதறி பலியானார். மற்றொரு குண்டு வீசிய போது, அது துரைமுத்து மீது பட்டு அவரும் உயிரிழந்தார். இதன்பின்னர் அங்கு பதுங்கி இருந்த துரைமுத்துவின் சகோதரர் சுவாமிநாதன், உறவினர் சிவலிங்கம், வேட்டை தடுப்பு காவலர் சுடலைக்கண்ணு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
30 குண்டுகள் முழங்க அடக்கம்
உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடல் திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான ஏரல் அருகே பண்டாரவிளைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு போலீஸ் உயர்அதிகாரிகள் முன்னிலையில் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
கர்ப்பிணி மனைவி
தனது கணவர் சுப்பிரமணியன் வெடி குண்டு வீச்சில் பலியானதை பார்த்து அவரது மனைவி புவனேஸ்வரி கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உருக்கியது. இறுதி சடங்கிற்கு வந்த டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் கூறுகையில். நான் 10 மாத ஆண் குழந்தையின் தாய். தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளேன். என் கணவர் உயிரோடு திரும்பி வர வேண்டும் என திரும்ப திரும்ப கூறி அழுதபடியே இருந்தார்.
இளம் வயதில் துயரம்
தன் தாயையும் தந்தையும் பார்த்து அன்பு பாராட்டி வளர வேண்டிய 10 மாத குழந்தை, தந்தையின் முகத்தை கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத பருவத்தில் அவரை இழந்துள்ளான் . இன்னொரு குழந்தை பிறக்கும் முன்பே தந்தையை இழந்த கொடூர நிலையை சந்தித்துள்ளது. இளம் வயதில் கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை என சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி கதறி அழுதபடியே நேற்று இருந்தார். இதைபார்த்த அனைவருக்கும் நெஞ்சை உருக்கியது.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
கொடூரமான குற்றவாளிகளை பிடிக்க போகும் போது போலீஸ்காரர்கள் அடிக்கடி தங்கள் இன்னுயிரை நீத்துள்ளார்கள். எனவே கொடூரமான குற்றவாளிகளை ஜாமீனில் விடும் விஷயத்தில் அரசு இனி கடுமையான முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் பல குற்ற வழக்கில் கைதாகி உள்ளவர்கள் ஜாமீனில் வெளியே வருவது அனைவருக்கும் பேராபத்து ஆகும்.