கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்!
தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கினால் நான்தான் போட்டியிடுவேன் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பலகட்டமாக நடந்தது. இதில் நேற்று முன் தினம் அதிமுகவுடன் பாஜக, பாமக கூட்டணி இறுதியானது.
இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி, தென் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது.
முக்கியத்துவம்
இந்த நிலையில் இதுகுறித்து தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கினால் நான்தான் போட்டியிடுவேன். திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறது.
இழுபறி
திமுக கூட்டணியில் யாருக்கும் மன ஒற்றுமை இல்லை. அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் பெற முயற்சிப்பதால் இழுபறியான நிலை உள்ளது என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வழக்கம்
பொதுவாக யாரையேனும் நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா, அந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டால் , அதற்கு அவர் அது குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். கட்சி தலைமை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன் என்று கூறுவதுதான் வழக்கம்.
சலசலப்பு
ஆனால் பொன்னாரோ அவ்வாறு ஏதும் கூறாமல் கன்னியாகுமரியில் நான்தான் போட்டியிடுவேன் என கூறியுள்ளது அக்கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்பாளர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.