வேளச்சேரி, அல்லது கோவில்பட்டியில் போட்டி.. உறுதியாக சொன்ன ராதிகா சரத்குமார்.. பின்னணியில் செம பிளான்
தூத்துக்குடி: வேளச்சேரி தொகுதியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அந்த கட்சி துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன் கூறியுள்ளார். அதேநேரம், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டின்போது, வேளச்சேரி தொகுதி கிடைக்காவிட்டால் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் என்கிறார் ராதிகா.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி வந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேர்தல் வியூகம்
அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ள சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வேளச்சேரி தொகுதியில் ராதிகா
துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன் பேசுகையில், எம்ஆர் ராதா பற்றி குறிப்பிட்டார். அப்போது வரும் சட்டசபை தேர்தலில் ராதிகா, வேளச்சேரியில் போட்டியிடும் போது மிகப்பெரிய ஆதரவை தர வேண்டும் என்று தெரிவித்தார். பொதுக்குழு கூட்டத்தில் இது பற்றிய முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் துணை பொது செயலாளர் விவேகானந்தன் பொதுமேடையில் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ஏன் வேளச்சேரி தொகுதி?
தென் சென்னை பகுதியில் உள்ளது வேளச்சேரி தொகுதி. இங்கு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்களில் பலர் கணிசமாக வசிக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சரத்குமாருக்காக ராதிகாவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர, ஒரு நடிகையாக, ராதிகா சரத்குமாரின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை அது வெற்றி பெற்றால் ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
தென் சென்னை
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென் சென்னை லோக்சபா தொகுதியாகும். தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஐடி நிறுவன ஊழியர்களும் கணிசமாக உள்ள பகுதிகள் இவையாகும். அதேநேரம், வேளச்சேரி தொகுதியை கூட்டணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் கட்சியான, மக்கள் நீதி மய்யம் விட்டுத்தராது எனத் தெரிகிறது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. திமுக VS மய்யம் VS அதிமுக என்ற கடும் போட்டி நிலை அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் கோவில்பட்டியில் போட்டியிட்டாலும் கூட ஓகேதான் என ராதிகா கூறியுள்ளார்.