தந்தை,மகன் மரணம்...மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துங்க...தூத்துக்குடி காங்.க்கு ராகுல் வேண்டுகோள்
தூத்துக்குடி: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் மரணத்திற்கு காரணமான போலீஸாரின் செயல், தனக்கு மன வேதனையை தருவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சக்தி உறுப்பினர்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறியிருப்பதாவது;
அன்புள்ள நண்பர்களுக்கு,
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு காரணமான போலீஸாரின் செயலை அறிந்து வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்.
இன்று இரவு 7 மணிக்கு உங்கள் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்த சகோதர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறேன்.
நான் நேரில் வந்து ஆறுதல் கூற கொரோனா சூழலால் இயலவில்லை.
நன்றி.
இவ்வாறு ராகுல்காந்தி தனது குறுஞ்செய்தியில் (மெசேஜ்) குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்... நம்பிக்கையூட்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் மரணம் அடைந்ததற்கு ராகுல் ஏற்கனவே ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ள நிலையில், கூடுதலாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துமாறும் தனது கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் ஆங்கில ஊடகங்களிலும் கடந்த 2 நாட்களாக பேசு பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் தேசியளவில் சில புலனாய்வு பத்திரிகையாளர்கள் இந்த விவகாரத்தில் ஜல்லடை போட்டு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு கேள்விகளையும் முன் வைக்கின்றனர். இதனால் இதில் தொடர்புடையவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.