இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Recommended Video
தூத்துக்குடி: தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழை பெய்யாததே தமிழகத்தில் குடிநீர் பிரச்சனைக்கு காரணம் என்று குறிப்பிட்டார். செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும், அதுகுறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருவதாகக் கூறிய அமைச்சர் வேலுமணி, இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றார். மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, மழை பெய்யாததால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இயற்கையாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் நலப்பணிகளை ஆற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். தனியார் லாரி உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.