அரசின் "காலை சுற்றிய சாத்தான்குளம்".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி
சாத்தான்குளம் சிறுமி கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது
தூத்துக்குடி: "அரசின் காலை சுற்றிக் கொண்டுவிட்டது சாத்தான்குளம்" என்றுதான் சொல்ல வேண்டும்.. அடுத்தடுத்த பகீர்களை சாத்தான்குளம் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே இதற்கெல்லாம் பிரதான காரணம்!
தூத்துக்குடி என்றாலே இவ்வளவு காலம் ஸ்டெர்லைட், துப்பாக்கி சூடு என்றுதான் நினைவுக்கு வந்தது.. ஆனால், அந்த கொடூரத்தையும் மீறி, உச்சக்கட்ட கொடூரங்களும் இருக்கவே செய்கின்றன என்பது சமீபகாலமாக நிரூபணமாகி வருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தை இன்னும் லேசில் நம்மால் கடந்து போய்விட முடியவில்லை.. சம்பவம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ளதால் காவல் துறை வசமாக சிக்கி உள்ளது.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அறிக்கை போன்றவைகளில் மருத்துவ துறை சம்பந்தப்பட்டுவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதால், முதல்வருக்கே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டனர் சாத்தான்குளம் போலீஸார். பென்னிக்ஸை அடித்தவர்கள் யார் யார் என்றே இப்போது வரை வெளிப்படையாக தெரியவில்லை.. இதுதொடர்பான சிபிஐ வழக்கு சூடு பிடித்துள்ளது.
இப்போது, அடுத்த விவகாரமாக 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறாள்.. இது முதல் முறையல்ல.. சமீபத்தில்தான் திருச்சி அருகே ஒரு கொடூரம் நடந்தது. சிறுமிகள் இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது... இதற்கு போதை பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது.. இந்த போதையே பலவித கிரிமினல் செயல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தும் விடுகிறது... இதை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் அரசுதான் முன் வரவேண்டும்.
ஏற்கனவே கொரோனாவால் தமிழகம் தத்தளித்து கிடக்கிறது.. அரசும் தடுப்பு விஷயத்தில் மிக மிக தீவிரமாக இறங்கி உள்ளது.. எனினும், லாக்டவுன் உள்ளிட்ட விஷயங்களில் திட்டமிடல் சரியாக இல்லை என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது.. இதைதான எதிர்க்கட்சிகளும் தினம் தினம் சொல்லி வருகின்றனர்.. இப்போது சாத்தான்குளம் சர்ச்சைகள் அரசுக்கு எதிராக திரும்ப கூடிய சூழலுக்கு உருவாகி உள்ளது.
சாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்!
தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்தே வருகிறார்கள்.. குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என்பதையும் உணர்ந்தே வருகிறார்கள். தாம் எந்த அளவுக்கு பொத்தி பாதுகாக்கப்படுகிறோம், எந்த அளவுக்கு தாங்கி பிடித்து கொள்ளப்படுகிறோம், எந்த அளவுக்கு பத்திரப்படுத்தி கொள்ளப்படுகிறோம் என்பதில்தான் எந்த ஒரு அரசின் உறுதிதன்மையும், நிலைத்தன்மையும் அடங்கி இருக்கிறது.