நாடார் சமுதாய மக்கள் மீது பிரச்சனை என்றால் பாஜக உங்களோடு நிற்கும்: சாத்தான்குளத்தில் சசிகலா புஷ்பா
தூத்துக்குடி: நாடார் சமுதாயத்தில் ஒருவர் மீது பிரச்சனை என்றாலும் தமிழக பாஜக உங்களோடு நிற்கும் என்று சாத்தான்குளத்தில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையின் போது தாக்கியதில் தந்தை, மகன் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை, மகன் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் அனைத்து அரசியல் கட்சியினரும் முகாமிட்டு மக்களுடன் போராடி வருகின்றனர்.
சாத்தான்குளம்.. "ஜாதி"யை நுழைத்து அழகிரி விட்ட அறிக்கை.. கொந்தளிக்கும் மக்கள்..சிக்கலில் காங்கிரஸ்!
சசிகலா புஷ்பா பேட்டி
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை இயக்குநரிடம் திமுக எம்பி கனிமொழி புகார் கொடுத்திருந்தார். அதிமுகவில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளார். இப்போராட்டத்தின் போது சசிகலா புஷ்பா அளித்த பேட்டி:
நாடார் சமுதாயத்தில்...
சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி விசாரணை நடத்துவார்கள் என்று நம்புகிறோம். இங்குள்ளவர்களுக்கு நீதி வேண்டும். நாடார் சமுதாய மக்கள் ஒருவர் மீது ஒரு பிரச்சனை என்றாலும் நாங்கள் இருக்கிறோம். நிச்சயமாக உங்களோடு வந்து நிற்போம் என்பதை காட்டுவதற்காகத்தான் எங்கள் மாநிலத் தலைவர் இங்கே அனுப்பி வைத்தார்.
உங்களோடு பாஜக இருக்கிறது
உங்களோடு நாங்கள் நிச்சயம் நிற்போம். நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம். இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நீதிமன்றத்தின் வாயிலாக உங்களுக்கு என்ன என்ன தேவையோ அதை செய்து தருவதற்கு உங்கள் சகோதரியாக நான் இருக்கிறேன். எங்கள் கட்சி இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன் . இவ்வாறு சசிகலா புஷ்பா பேட்டியளித்துள்ளார்.
|
பாஜக தலைவர்கள் மவுனம்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போலீசாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் இந்த விவாகரத்தில் வெளிப்படையான அறிக்கை வெளியிடப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் முருகனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான அறிக்கைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.