தினகரன் கட்சியினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் குதித்த சசிகலா புஷ்பா
தூத்துக்குடி: மத்திய அரசின் கண்காணிப்பு குழு திடீரென ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தினகரன் கட்சியினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் சசிகலா புஷ்பா ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் கண்காணிப்பு குழு கூட்ட தலைவர் நட்டர்ஜி எம்பி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உட்பட அரசு அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலக வேலை காரணமாக வெளியூர் சென்றதாக தெரிகிறது.
கூட்டம்
இதற்கிடையே கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டத்தின் துணைத் தலைவரும் எம்பியுமான சசிகலா புஷ்பா தனது ஆதரவாளர்களுடனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருடனும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர், கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான விளக்கம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பரபரப்பு
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் சமரசம் ஏற்படாததால் சசிகலா புஷ்பா எம்பி தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களுக்காக பணி
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்றைய தினம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துவதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பின் பேரில் நான் டெல்லியில் இருந்து எனது அலுவல்களை விட்டுவிட்டு தூத்துக்குடி மக்களுக்காக பணி செய்ய வந்தேன்.
வரவில்லை
ஆனால் இன்று நடக்க இருந்த கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுக் கூட்ட தலைவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக காரணம் கூறுகின்றனர். அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரவில்லை. எம்எல்ஏக்கள் , அதிகாரிகள், ஆட்சியர் என யாரும் வரவில்லை. எனவே இன்றைக்கு இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதைப் பார்க்கையில் மத்திய அரசின் திட்டங்களை சந்தீப் நந்தூரி புறக்கணிக்கிறாரோ என கேள்வி எழுப்ப
13 பேர் கொலை
இதுகுறித்து அவர் பிரதமர் அலுவலகத்துக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இதுதவிர ஸ்டெர்லைட் ஆலை இன்னும் முழுவதுமாக ஏன் மூடப்படவில்லை என்பது குறித்து நான் கேள்வி எழுப்பயிருந்தேன். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள்
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு கழிவுகளால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கேன்சர் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட ஆலை முழுவதுமாக மூடாமல் தற்போது நடைபெறுகின்ற அளவுக்கு ஒரு ஏமாற்று வேலையை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
180 பேர் பாதிப்பு
இது குறித்து கேட்கையில் அலுவலக நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்வதாக கூறி விட்டு ஆலையினுள் ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை வெளியே கொண்டு போய் வருகின்றனர். இது ஆலய முழுவதுமாக இயங்குகின்றதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது நேற்றைய தினம் மட்டும் அரசு மருத்துவமனையில் 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளக்கம் அளிக்க வேண்டும்
5 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்கவும் இங்கு யாரும் இல்லை. ஆகவே எனது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை நான் ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே இருப்பதாக முடிவு செய்துள்ளேன் ஆட்சியர் விளக்கம் அளித்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என கூறினார்.