சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில்.. 2 காவலர்கள் அப்ரூவராவதாக தகவல்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இரு காவலர்கள் அப்ரூவராகின்றனர்
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் அப்ரூவராக மாற இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமான முறையில் காவலர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளத்தில் கடந்த மாதம் ஊரடங்கு நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக செல்போன் கடையை பென்னிக்ஸ் திறந்து வைத்து இருந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இதுதொடர்பாக எழுந்த சிறிய வாக்குவாதம், தந்தை மகன் உயிரிழப்பு வரை கொண்டு சென்றது.
அதுவும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் தந்தை, மகனை கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தியது தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் குற்றம் நடக்கும்போது அங்கு இருந்த பெண் தலைமை காவலர் ரேவதி அனைத்து உண்மைகளையும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் விசாரணையின்போது தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து வழக்கின் போக்கே வேகம் எடுத்தது. முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கிய ரேவதி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கொடுத்த ஊக்கத்திற்குப் பின்னர் உண்மைகளை தெரிவித்தார். இதனால் அவர் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளார்.
"ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. ரத்தத்தை பார்த்தேன்" குமுறிய "ரேவதீ".. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
இதற்கு முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மாற்றி இருந்தது. சிபிஐ விசாரிக்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீதும் கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவரையும் காவலர்கள் தேடி வந்தனர். இவர் நேற்றிரவு முழுவதும் தப்பிச் செல்ல ஓடி ஒளிந்துள்ளார். ஆனால், இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே தப்பிச் செல்லும்போது இவரை காவலர்கள் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தற்போது இவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
இந்த சூழலில் தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் அப்ரூவராகிறார். அதேபோல கைது செய்யப்பட்ட
காவலர் ஒருவரும் அப்ரூவராக மாற இருப்பது வழக்கில் பெரிய திருப்பத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரகு கணேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.