சாத்தான்குளம் வழக்கு... முன்னுக்கு பின் முரணாக எப்.ஐ.ஆர்...? தோலுரிக்கும் சிசிடிவி காட்சிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதில் பதிவான காட்சிகள் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுக்கு முரணாக அமைந்துள்ளதால், இது பல்வேறு கேள்விகளை எழுப்பி வழக்கை வேகம் எடுக்க வைத்துள்ளது.
இதனிடையே எப்.ஐ.ஆரில் பதிவு செய்துள்ளது போல் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து, தந்தையும் மகனும் தரையில் கட்டிப்புரண்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய் என ''டைம்ஸ் நவ்'' தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் 8 ஆலோசனைகள்... உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்
தமிழகத்தை உலுக்கிய
கடந்த 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த இரண்டு மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து பிரபல ஆங்கில ஊடகமான ''டைம்ஸ் நவ்'' தொலைக்காட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் இந்த சம்பவம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது.
கடை முன் நடந்தது என்ன?
சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி இரவு சுமார் 7.45 மணிக்கு ஏபிஜே மொபைல்ஸ் என்ற செல்போன் கடை முன் நின்று போன் பேசிக் கொண்டிருக்கிறார் ஜெயராஜ். அப்போது அங்கு ரோந்து வரும் போலீஸார் சாலையில் வாகனத்தில் அமர்ந்தவாறு ஏதோ பேசிவிட்டு ஜெயராஜை அழைக்கின்றனர். இதையறிந்து ஜெயராஜின் மகன் பெனிக்ஸ் காவல்துறை வாகனம் அருகே ஓடோடிச் சென்று ஏதோ பேசுகிறார். மற்றபடி போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது போல் கடைக்கு முன் கூட்டமும் இல்லை, காவல்துறை பணி செய்ய விடாமல் தந்தையும், மகனும் கட்டிப்புரளவும் இல்லை. இது சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
முரண்பட்ட எப்.ஐ.ஆர்.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பிரபல ஆங்கில ஊடகமான ''டைம்ஸ் நவ்'' தொலைக்காட்சி ஆணித்தரமான கேள்விகளை முன்வைத்துள்ளது. செல்போன் கடைக்கு முன் கூட்டம் இருந்ததால் கலைந்து செல்லுமாறு கூறியதாகவும், அப்போது தகாத வார்த்தைகளை கூறி போலீஸை பணி செய்யவிடாமல் தந்தையும் மகனும் தடுத்ததாகவும் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடைக்கு முன் போலீசுடன் உருண்டு புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்டது போல் உள்ளதாக கூறியுள்ள ''டைம்ஸ் நவ்'' தொலைக்காட்சி இவ்வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்டி வருகிறது.
மீண்டும் தலைவலி
இன்று வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் போலீஸாரின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. முன்னுக்கு பின் முரணாக எப்.ஐ.ஆர். உள்ளதால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் மீண்டும் தலைவலி உருவாகியுள்ளது. இதனிடையே எதிர்க்கட்சிகள் இந்த சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தி சரமாரியாக கேள்விகள் எழுப்பி வருகின்றன.