தண்ணீர் கேட்டு துடித்த ஜெயராஜ்.. ரத்தம் வடிய அடித்தனர்.. சாத்தான்குளம் பெண் கான்ஸ்டபிள் கணவர் பேட்டி
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் சாட்சியம் அளித்துள்ளனர். அவரது கணவரும் இதை உறுதி செய்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய அந்த பெண் காவலர், சம்பவத்தன்று இரவு 8.30 மணி அளவில் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்திற்குள், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
சாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்
இரவு பணி
காவல்நிலையத்தில் என்ன, என்ன நடக்கிறது என்பதை எல்லாம் பதிவு செய்யவேண்டிய பணி இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே உள்ளே நடப்பவற்றை அவரும் கவனித்துள்ளார். இதையெல்லாம் பார்த்து அவருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை தனது கணவரிடமும் பகிர்ந்துள்ளார். ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால், நாமும் அந்த கான்ஸ்டபிள் மற்றும் அவரது கணவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறோம். பெண் கான்ஸ்டபிளின் கணவர் கூறியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
உண்மையை சொன்ன கான்ஸ்டபிள்
அன்னிக்கு ராத்திரி போலீஸ் ஸ்டேஷன் போயாச்சான்னு கேக்க, ஒய்புக்கு போன் போட்டேன். உள்ளே யாரையோ போட்டு அடிச்சிகிட்டு இருக்காங்கன்னு சொன்னார். நான் உள்ள போய் பார்க்கனும். பார்த்துட்டு சொல்கிறேன்னார். ராத்திரி ஒரு 10 மணி இருக்கும். திரும்ப போன் போட்டேன். அப்போ, உள்ள, அப்பா-மகன் 2 பேர கண்மூடித்தனமா போலீஸ் அடிச்சிட்டு இருக்குன்னு.. எனக்கு பார்க்க பாவமாக இருக்குன்னு சொன்னார் என் மனைவி.
தண்ணீர் கேட்டு கதறிய ஜெயராஜ்
பெரியவர் (ஜெயராஜ்) என்கிட்ட தண்ணீர் கேட்டார். நானும் தண்ணீர் கொடுத்தேன் அப்படீன்னும் சொன்னார். ராத்திரி 11 மணிக்கு திரும்ப போன் போட்டேன். அவுங்கள தொடர்ந்து போட்டு அடிச்சிட்டு இருக்காங்கன்னும், அவுங்க உடம்புல இருந்து ரத்தம் வெளியே வருதுன்னும் சொல்லி, என்கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டாங்க என்னோட ஒய்ப்.
சாட்சி சொல்ல தூண்டுதல்
பிறகுதான், 2 பேரும் இறந்து போனது தெரிஞ்சதும், ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க. ஆனா இப்போ விசாரணை ஆரம்பிக்கும்போது, சாட்சி சொல்றதா, வேண்டாமான்னு யோசிச்சாங்க. ஆனா. "நமக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு.. அவுங்களுக்கு நாளைக்கு இதே நிலைமை வந்தா யார் வந்து சாட்சி சொல்வா? துணிஞ்சி சாட்சி சொல்லு.. உன்ன வேலையை விட்டு நீக்கினா நான் சோறு போடுறேன்னு" தைரியம் சொன்னேன்.
சாட்சி சொல்ல ரெடி
இப்போ சாட்சி சொல்லியாச்சி. இதே சாட்சிய எங்க வேண்டும்னாலும் வந்து சொல்ல தயார். ஆனா, எனக்கும் என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேவை. இதுவரை எங்களுக்கு ஒரு பாதுகாப்பும் தரல. நிறைய பேரு போன்ல கூப்பிட்டு பேசுறாங்களே தவிர, நேர்ல வந்து பாதுகாப்பு கொடுக்கல. ஒருவேள என்னோட ஒய்ப்பை வேலையை விட்டு தூக்கினா கூட அவருக்கு சம்பாதிச்சி சாப்பாடு கொடுக்க நான் தயாராத்தான் இருக்கிறேன். ஆனா நான் ஒரு பக்கம் வேலைக்கு போறேன், மனைவி ஒரு பக்கம் வேலைக்கு போறாங்க. அதனால எங்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், என்னோட மூத்த மகள், ஓடி வந்து, "சாட்சி சொல்லுங்க அம்மா.. பாவமா இருக்கு.. உண்மையை சொல்லுங்கம்மான்னு" சொல்லுச்சி. அதனாலதான் தைரியமா, சாட்சி சொல்லியிருக்கிறாங்க என்னோட மனைவி. இவ்வாறு பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார்.