சாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் முன்பாக பென்னிக்ஸ்சின் நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் முன்பாக பென்னிக்ஸ்சின் நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி என்ன நடந்தது என்று சிபிசிஐடி போலீசாரிடம் ஐந்து பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மதுரை ஹைகோர்ட் வழிகாட்டுதலின் படி வியாபாரிகளின் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்குக் காரணம் சிறையில் இருந்த கைதிகள்தானாம். கெத்தாக வலம் வந்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தவர்களுடன் தாங்களும் இருக்க வேண்டியதாகி விட்டதே என மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டார்களாம் அதனால்தான் ஐந்து பேரையும் மதுரை சிறைக்கு மாற்றி விட்டார்களாம். அங்கும் கைதிகள் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு ஐந்து அறைகளில் தனித்தனியாக அடைத்திருக்கிறார்களாம்.
இன்னும் ஒரு சில தினங்களில் ஐந்து பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கும் எனத்தெரிகிறது. இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் ஐந்து பேர், விசாரணைக்காக சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளனர்.
சாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு பல மாவட்டங்களில் தடை
கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று சாத்தான்குளத்தில் நடந்தது என்ன? கடைமுன்பு காவல்துறையினருக்கும் பென்னிக்ஸ், ஜெயராஜ் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜராகியுள்ள போலீசார் விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிகிறது.
இதனிடையே தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர், சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பென்னிக்ஸ்சின் நண்பர்கள் கூறப்போகும் வாக்குமூலங்கள் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.