சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் சிந்திய ரத்தமும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையும்
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. லத்தியில் உள்ள ரத்தக்கறைகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் இறந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம், லத்தி உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தக்கறைகள் ஜெயராஜ் , பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர்கள் சிந்திய ரத்தத்தை அவர்களையே துடைக்கச் சொல்லி துன்புறுத்தப்பட்டதாகவும் அதிக ரத்தக்கசிவு இருந்ததால் இரண்டு முறை உடை மாற்றப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி லாக்டவுன் காலத்தில் பொதுமுடக்க விதிகளைமீறி கடை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவர் மீது சாத்தான்குளம் காவல்துறையினர் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணைக்குப் பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்கவே கஸ்டடி மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாரதிதாசன், தந்தை மகன் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணையை தொடங்கினார். சாத்தன்குளம் காவல்நிலைய ஏட்டு முதல் மாவட்ட எஸ்.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
9 பேர் கைது
மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கி தமிழக அரசுக்கும் இது குறித்து உத்தரவிட்டதன் பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் பல குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கி பல காவலர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் சிக்கிய 9 காவலர்கள் சிறையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ வசம் மாறியது.
சிபிஐ குற்றப்பத்திரிக்கை
சிபிஐ விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் முதல் குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும், அவரைத் தொடர்ந்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகுகணேஷ், போலீசார்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலுமுத்து ஆகியோர் வரிசையாக குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரை மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால் அவரை குற்றவாளியாக சேர்க்கவில்லை.
கொடூர தாக்குதல்
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து இருவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர். இருவரையும் மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் கொடூரமாக காவலர்கள் அடித்துள்ளனர். ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும் மாறி மாறி காவலர்கள் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.
ரத்தத்தை துடைத்த ஜெயராஜ் பென்னிக்ஸ்
ஜூன் 19ஆம் தேதி தந்தை மகன் இருவரையும் விடிய விடிய காவலர்கள் தாக்கியுள்ளனர். ரத்தம் சொட்டச் சொட்ட இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இரண்டு பேரின் ரத்தமும், காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது.
சிந்திய ரத்தத்தை துடைக்க சொன்ன போலீஸ்
போலீஸ் அடித்ததில் கொட்டிய ரத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடைகள் ஈரமாகிவிட்டன. ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் காயங்களில் இருந்து சிந்திய ரத்தத்தை இருவரையுமே துடைக்கக் கூறி காவலர்கள் அடித்துள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடனேயே ரத்தத்தை தங்கள் உடையாலேயே இருவரும் துடைத்துள்ளனர். சிதறிக் கிடந்த ரத்தத்தை துடைத்ததால் உடைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்துவிட்டது.
உடைகளை மாற்றிய காவலர்கள்
காயங்களுடன் மருத்துவமனைக்கு 2 பேரையும் அழைத்து சென்றபோது முதல்முறை உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். மாஜிஸ்திரேட் முன் 2 பேரையும் ஆஜர் செய்யும் முன்பும் 2 பேரின் உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். காவல் நிலையத்தில் சிதறிக்கிடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தத் துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீஸ் முயன்றுள்ளது.
ஒத்துப்போகும் டிஎன்ஏ
சாத்தான்குளம் காவல் நிலையம், லத்தி உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தக்கறைகள் ஜெயராஜ் , பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர்கள் சிந்திய ரத்தத்தை அவர்களையே துடைக்கச் சொல்லி துன்புறுத்தப்பட்டதாகவும் அதிக ரத்தக்கசிவு இருந்ததால் இரண்டு முறை உடை மாற்றப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மருத்துவரின் அலட்சியம்
தந்தை, மகன் இருவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை குறிப்பிடாமல் சிறையில் இருக்க தகுதி என மருத்துவர் வெண்ணிலா அலட்சியமாக சான்று அளித்ததாகவும் சிறையில் அடைக்கும் போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், சிறையில் இருக்கும் காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.