சாத்தான்குளம் ஸ்டேசன் ஏட்டு முதல் தூத்துக்குடி எஸ்பி வரை ட்ரான்ஸ்பர் - அதிரடி பின்னணி
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இருந்த காவலர்கள் அனைவரும் கூண்டோடு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியும் காத்திருப்போர் பட்டியலில் வைக்
தூத்துக்குடி: தமிழக காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக ஒரு வழக்கில் போலீஸ் ஸ்டேசனில் இருந்த எல்லோரையும் இடம்மாற்றி விட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு பிரச்சினைக்குரிய அந்த காவல்நிலையம் வருவாய்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் விசாணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சடலமாகவே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த பிரச்சினை பூதாகரமாகி போலீஸ் ஸ்டேசன் ஏட்டு முதல் மாவட்ட எஸ்.பி வரை இப்போது சிக்கலில் சிக்கியுள்ளனர்.
சாத்தான்குளம் என்ற பெயர் இப்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. மரிக்கொழுந்தநல்லூராக இருந்த இந்த ஊரின் ஜமீன்தார் சாத்தான் சாம்பான் என்பவர்தான் இந்த ஊரில் நிறைய குளங்களை வெட்டியிருக்கிறார். அவருடைய நினைவாகவே இந்த ஊருக்கு சாத்தான்குளம் என்று பெயர் மாறியதாக சொல்கிறார்கள்.
சாத்தான்குளம் சட்டசபை தொகுதியில் கடந்த 2003ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்ற போது அந்த ஊரின் பெயர் பிரபலமானது. இப்போது வர்த்தகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் மீண்டும் சாத்தான் குளத்தின் பெயரை உலகறியச் செய்துள்ளது.
குறைந்த விலையில் ஏழைகளுக்கு வீடுகள்.. 250 மில்லியன் டாலர் மதிப்பில் உலக வங்கி-தமிழக அரசு ஒப்பந்தம்
சாத்தான்குளம் துயரம்
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராடிய நிலையில்
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து புதிய இன்ஸ்பெக்டர்களாக கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த எப்.பெர்னார்ட் சேவியரை நியமித்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின் குமார் அபிநபு உத்தரவிட்டார்.
ஹைகோர்ட் மதுரைக்கிளை விசாரணை
சர்ச்சைக்குரிய காவல்துறையினரை சஸ்பென்ட் செய்ய பின்னரும் பிரச்சினை முடிந்து விடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இருவரின் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசனை விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மறுப்பு
மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீசார் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதாக புகார் எழுந்தது. மாஜிஸ்திரேட் பாரதிதாசனை ஒருமையிலும் மகாராஜன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் விமர்சித்திருந்தார். இதனை அப்படியே இ மெயில் மூலம் புகாராக மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பி வைத்தார்.
ஆட்சியர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேசன்
இதனை ஏற்று போலீசார் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் வட்டாட்சியர் செந்தூர் ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலைய பொறுப்பாளர்களாக நியமித்து தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஏஎஸ்பி டிஎஸ்பி எல்லோரும் காத்திருப்பு
சாத்தான்குளம் போலீஸ் டேசனில் பணியாற்றிய ஏட்டு முதல் அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டு பதிலாக 30 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் பாரதிதாசனை ஒருமையில் பேசிய கான்ஸ்டபில் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத ஏஎஸ்பி குமார், மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.பியும்
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இருந்து எல்லோரையும் ட்ரான்ஸ்பர் செய்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை, மகன் மரண வழக்கில் ஏட்டு முதல் ஏஎஸ்பி, டிஎஸ்பி, எஸ்.பி என அனைவரும் பந்தாடப்பட்டுள்ளனர்.
புதிய தென் மண்டல ஐஜி
இதனிடையே தென்மண்டல ஐஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய ஐஜியாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன், தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.