சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின்னர் தந்தை மகன் உயிரிழநத சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கடையை திறந்து இருந்ததாக கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கடந்த மாதம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் கோவில்பட்டி கிளை சிறையில் 22ம் தேதி அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
களத்தில் டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு.. சாத்தான்குளம் போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்கிறது
போலீஸ் தாக்கி பலி
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அவர்களின் ஆசன வாய் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் பரவியதால் இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தியது.
வழக்கில் திருப்புமுனை
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனை போலீசார் ஒருவர் மிரட்டியதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அதன் பின்னர் மருத்துவ அறிக்கையில் தந்தை மகன் இருவரது உடலில் காயங்கள் இருப்பது உறுதியானது. அதுமட்டுமின்றி அங்கு பணியாற்றிய காவலர் ரேவதி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். இதுதான் வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆய்வாளர் ஸ்ரீதர் கைது
சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் போது கொலை வழக்குபதிவு செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார்.
ஐந்து காவலர்கள் கைது
இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகியோரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு பின்னர் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகிய ஐந்து பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இதுவரை 10 பேர் கைது
கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இந்த வழக்கில் இதுவரை 10 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.