தலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார்
தூத்துக்குடி போலீஸ் தன்னை தாக்கியதாக பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்
தூத்துக்குடி: "இன்ஸ்பெக்டர் என் தலைமுடியை பிடித்து இழுத்து உள் ரூமுக்கு இழுத்து சென்றார்.. என் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார்... வலியால் அழுதேன்.. பிறகு காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார்... கெட்ட வார்த்தைகளால் திட்டினார்" என்று விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தூத்துக்குடி எஸ்பியிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் புகார் தந்துள்ளார்... மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி.. இவர் எஸ்பியிடம் அளித்துள்ள புகார் மனுவில் சொல்லி உள்ளதன் சுருக்கம் இதுதான்:
"நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருஷமாக வேலை பார்த்து வருகிறேன்.. என் அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த பிப்.22ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்ததன் பேரில் சென்றார்.
ஆனால் காலையில் அவர் விபத்தில் இறந்ததாக தகவல் வரவும், நான் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு நின்ற போலீசார் என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டதாக கூறினர். நாங்கள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்பதும், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கால் இடித்தும், தாக்கி காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதனால் நாங்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு உள்துறை அதிகாரிக்கும் புகார் அளித்தோம். இந்த புகாரின் மீது விசாரணை உள்ளதால் நேரில் வரசொல்லி தகவல் வரவும், ஜுன் 1ம் தேதி காலை 11 மணிக்கு தென்பாகம் ஸ்டேஷனுக்கு சென்றேன்.
அங்கிருந்த இன்ஸ்பெக்டர், நான் அளித்த புகார்களை வாபஸ் வாங்குமாறு மிரட்டினார்.. நான் மறுத்தேன்.. அதனால் என் தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்கு இழுத்து சென்றார்.. அங்கு தன் கைகளால் என் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார்... வலியால் அழுதேன்.. பிறகு காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார்... கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக பெண் போலீஸ் இருந்து ஒரு புகாரையும் பெற்று கொண்டு, தூத்துக்குடி கோர்ட்டில் என்னை இரவு 8 மணிக்கு ஆஜர்படுத்தினார்.. அதுவரை ஸ்டேஷனிலேயே என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். குடிக்க தண்ணீர்கூட தரவில்லை. பிறகு ஜெயிலில் அடைத்தனர். இப்போதுதான் எனக்கு ஜாமீன் கிடைத்தது.
பெண் என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.