என்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்
பள்ளி ஆசிரியரை வெட்டிய சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி: "என்னை விட்டுடு.. கெஞ்சி கேக்கறேன்" என்று கதறியும் சரமாரியாக கத்தியால் குத்தி ஆசிரியரை கொலை செய்தார் இளைஞர். இந்த காட்சி வாட்ஸ்அப்பில் விரைவாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்தவர் வடிவேல்முருகன். இவர் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கிரேஸி என்ற மனைவியும், ரோஸி ஏஞ்சல் என்ற 4 வயது மகளும் உள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருஷமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கள்ளக்காதல்
இதனிடையே, சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. பிரியாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளதாம். கணவனை பிரிந்த நிலையில் வடிவேலுவுடன் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது கிரேஸியின் குடும்பத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
மறுப்பு
இந்நிலையில், வடிவேல்முருகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாரானார். அப்போது அங்கு வந்த கிரேஸியின் தம்பி ஆஸ்டின் வடிவேல் முருகனிடம் தகராறு செய்திருக்கிறார். தனது அக்காவுடன் வாழுமாறும், பிரியாவை விட்டு வந்துவிடுமாறும் சொல்லி இருக்கிறார். இதற்கு வடிவேல் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
வீடியோ
இதில் ஆத்திரமடைந்த ஆஸ்டின் மறைத்து வைத்திருந்த கத்தியால், வடிவேல் முருகனை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் வடிவேல். இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனரே தவிர யாரும் வடிவேலுவை காப்பாற்ற முன் வரவில்லை.
என்னை விட்டுடு
இந்த கொலை சம்பவம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து ‘வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அந்த செல்போன் பதிவில், "என்னை விட்டுவிடு.. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்.. விட்டுடு" என்று ஆஸ்டின் காலில் வடிவேல் விழுந்து கதறுகிறார். ஆனாலும் கத்தியால் தாறுமாறாக குத்திய ஆஸ்டின் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.
அதிர்ச்சி
புதூர்-மதுரை மெயின் ரோட்டின் அருகில் நடந்த இந்த கொலையை ஏராளமானோர் பார்த்தபடியே சென்றனர். ஒரு கொலையை இத்தனை பேர் பார்த்தும் அதனை தடுத்து நிறுத்தாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து சென்றது அதைவிட வேதனையை தந்துள்ளது. செல்போனில் இப்படி வீடியோ எடுப்பதை தவிர்த்து, எல்லோரும் ஒன்றுகூடி இருந்தால், ஒருஉசுரை காப்பாற்றி இருக்கலாம்.