தூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை
பள்ளி ஆசிரியர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்
தூத்துக்குடி: பட்டப்பகலிலேயே பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடியையே அதிர வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகன். 40 வயதாகிறது. இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் சிறப்பு பள்ளியில் 12-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் கிரேஸி என்ற மனைவியும், ரோஸி ஏஞ்சல் என்ற 4 வயது மகளும் உள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருஷமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
முருகன்
எனவே அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா என்ற என்ற பெண்ணை 2-வதாக வடிவேல் கல்யாணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடிவேல்முருகன் இன்று வழக்கம் போல் வேலையில் இருந்தார். மாலையில் அவரை தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டின் அங்கு வந்தார்.
அற்புத செல்வம்
ஆஸ்டினுக்கு வயது 27 ஆகிறது. இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புத செல்வம், வடிவேல் முருகனை கத்தியால் குத்தினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனரே தவிர யாரும் வடிவேலுவை காப்பாற்ற முன் வரவில்லை.
விசாரணை
அளவுக்கு அதிகமாக கத்தி குத்துப்பட்ட வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர். பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.