சவூதியில் தமிழக இளைஞர் மரணம்.. உடலை தாயகம் கொண்டு வர எஸ்டிபிஐ உதவி
தூத்துக்குடி: சவூதி அரேபியாவின் ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித் ராமநாத் உடல் எஸ்டிபிஐ கட்சியின் உதவியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த வாலிபர் ரஞ்சித் ராமநாத் (27) சவூதி அரேபியா ஜீஸான் என்னும் ஊரில் தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11.08.2018 அன்று பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் படிவத்தை இந்திய தூதரகம் வழங்கிய போதும் இறந்தவரின் உடல் ஊர் வருவது தாமதமாகியது. இது குறித்து இறந்தவரின் உறவினர்கள் தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ கட்சியிடம் முறையிட்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனடிப்படையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுசெயலாளர் செங்கோட்டை நிஜாம் முகைதீன் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை இந்தியா அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். எஸ்டிபிஐ கட்சியின் துரிதமான களப்பணியை அடுத்து ரஞ்சித்தின் உடல் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியின் சென்னை நிர்வாகி ஜாஹிர் ஹுஸைன், உடலை பெற்றுக் கொண்டு ரஞ்சித்தின் தம்பி சுஜீத்திடம் ஒப்படைத்தார்.
இறந்தவரின் உடல் தூத்துக்குடி முத்தையாபுரம் எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாட்டினையும் செய்து கொடுத்த தூத்துக்குடி எஸ்டிபிஐ நிர்வாகிகளுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரத்திற்கும் ரஞ்சித்தின் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.