மோடி மீண்டும் பிரதமராக நடந்தேறிய ரகசிய யாகம்.. எருமைக்கு தங்க கொலுசு.! எல்லாம் தமிழ்நாட்டுல தான்
வல்லநாடு: மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தூத்துக்குடி அருகே ரகசிய சிறப்பு யாகம் நடத்தப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்பு யாகத்தின் போது எருமைக்கு தங்க கொலுசு மாட்டி சிறப்பு பூஜையும் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நாராயணன் என்பவர் நடத்தி வரும் கோசாலை உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, இந்த கோசாலையில் ரகசிய சிறப்பு யாகம் நடந்துள்ளது.
இருபத்தியொரு பசுக்கள் நிறைந்த இந்த கோசாலையில், சுமார் 15 வேத விற்பனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 4 மணிநேரம் வேதபாராயணம் செய்து யாகம் நடத்தியுள்ளனர்.
இதில் உச்சகட்டமாக எருமைக்கு தங்க கொலுசு மாட்டி சிறப்பாக ஜோடிக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடந்தேறியுள்ளது
இந்த வழிபாட்டில் மோடி மீண்டும் பிரதமராக உத்தரவு கிடைத்துள்ளது என்றும், அவர் மீண்டும் பிரதமரானவுடன் வல்லநாடு வந்து இந்த கோசாலையில் மேலும் சிறப்பான பூஜை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உறைய வைக்கும் பனிக்குகையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம்!
மோடி பிரதமராக வேண்டி வல்லநாட்டில் நடத்தப்பட்ட பூஜைகள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்தவர்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மோடியின் பிரதிநிதியாக இந்த யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர் மட்டுமே செல்போனை பயன்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டாராம். அவ்வளவு ரகசியமாக நடந்திருந்தாலும் தற்போது இது குறித்த தகவல் எப்படியோ வெளிவந்துவிட்டது.
இதேபோல தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் வெற்றி பெற வேண்டி, சிறப்பு பூஜையும், எருமை பூஜையும் நடைபெற்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.