குளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்!
தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் மகன் வீசி சென்றுள்ளார்
தூத்துக்குடி: குப்பை அள்ள வந்த துப்புரவு பணியாளர்கள் அந்த குப்பை தொட்டியை எட்டி பார்த்ததும் அதிர்ந்து உறைந்து நின்றுவிட்டனர். குளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வைத்தபடி ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது!
தூத்துக்குடி தனசேகரன்நகரில் உள்ள குப்பை தொட்டியில்தான் இந்த பிணம் கிடந்துள்ளது. இதை பற்றி துப்புரவு பணியாளர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், போலீசாருடன் சம்பவ இடத்துக்கே வந்துவிட்டார். உடனடியாக இதை பற்றி விசாரணை நடத்தினார். அப்போதுதான் அந்த துயரம் மற்றும் திடுக் தகவல்கள் வெளியே வந்தன.
புரோகிதம்
தூத்துக்குடி தனசேகரன் நகரை சேர்ந்த தம்பதி நாராயணசாமி - வசந்தி. இவர்களது மகன் முத்துலெட்சுமணன். தந்தையும் மகனும் புரோகிதம் செய்யும் தொழில் செய்பவர்கள். நாராயணசாமி சில வருடங்களுக்கு முன்பே, குடும்பத்தை விட்டு பிரிந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி வேலை பார்க்கிறாராம்.
வருமானம்
இந்நிலையில், வசந்தி படுத்த படுக்கையில் கிடந்துள்ளார். இவரை இத்தனை வருடம் மகன் முத்துலட்சுமணன்தான் பக்கத்தில் இருந்து கவனித்து வந்துள்ளார். முத்துலட்சுமணனுக்கு வயது 29 ஆகிறது. வருமானமும் பெரிதாக இல்லை.
வசதி இல்லை
புரோகிதர் தொழிலில்தான் ஜீவனம்... இதுவரை 1 லட்சம் வரை மருத்துவ செலவு பார்த்தாயிற்று.. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க கையில் பணம் இல்லை.. கடன் வாங்கவும் வழி இல்லை.. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு இடத்தில் புரோகிதம் செய்ய கிளம்பி சென்றுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை வந்து பார்த்தால் தாய் வசந்தி இறந்து கிடந்துள்ளார்.
குப்பை தொட்டி
சொந்தக்காரர்களும் இல்லை.. உடன் பிறந்தவர்களும் இல்லாத நிலையில் தாயின் சடலத்தை கையில் வைத்து கொண்டு தவித்திருக்கிறார் முத்துலெட்சுமணன். மனதை கல்லாக்கி கொண்ட மகன், கண்ணீருடன் தாயை குளிப்பாட்டினார்.. பொட்டு வைத்து, சேலை அணிவித்து, தன் வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டியில் தாயின் உடலை வீசியுள்ளார்.
கண்ணீர்
அப்படி வீசினால், சடலத்தை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்துதான் செய்தாராம். இதெல்லாம் போலீசார் விசாரணையில் கண்ணீருடன் கூறினார் முத்துலட்சுமணன். இதையடுத்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வசந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதி சடங்கு
பின்னர் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் இறுதிச்சடங்கும் நடத்தப்பட்டது. வறுமையின் கோரப்பிடியில் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாமல், பெற்ற தாயின் உடலை மகனே குப்பையில் வீசிய சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் தமிழக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.