ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும் எனில் நிச்சயமாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு எச்சரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி, ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தல் உட்பட பல்வேறு போராட்டங்களை அறிவித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு இயக்கத்தினருக்கு இடையேயான சமரச கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் முன்னிலை
இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி வினாயகமூர்த்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்ரமணியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஹென்ரி தாமஸ், குமரெட்டியாபுரம் மகேஷ், நாம்தமிழர் கட்சி வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி இல்லை
கூட்டத்தின் முடிவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் வினாயகமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு அரசுக்கு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, மாவட்ட நிர்வாகம் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது கோர்ட் உத்தரவை மீறிய செயலாக அமையும் என்று விளக்கமளித்தார்கள். எனவே ஜனநாயக ரீதியில் போராட விரும்பும் மக்கள் கோர்ட்டு அனுமதி பெற்று வந்தால், மக்களின் போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆலை செயல்பட கூடாது
மேலும் அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கூறினோம். அதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள் ஆலையை மூட அரசு பிறப்பித்த அரசாணையை கொள்கை முடிவு தான். இருப்பினும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. ஆகவே நிச்சயம் ஆலை செயல்பட கூடாது என்ற முடிவை தமிழக அரசு பெற்றுத்தரும் நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளது. ஆகவே மாவட்ட மக்கள் எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆலையை திறக்ககூடாது
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கூறுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படாது என்பதை நம்புகிறோம். மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் மக்களின் போராளியாக இருந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.
போராட்டம் நடக்கும்
குமரெட்டியாபுரம் மகேஷ் பேசுகையில், மே 22 போல் மீண்டும் ஒரு ஜனநாயகப் படுகொலையை நாங்கள் விரும்பவில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை என்பதை கூட்டத்தில் பதிவு செய்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஜனநாயக முறையில் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கூறினார்.
போராட்டம் உறுதி
போராட்டக்குழு கயாஸ் கூறியதாவது: தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அரசுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறோம் என்று கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும் எனில் நிச்சயமாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.