புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு- நீட்-க்கு இப்ப நோ- அப்ப நாங்க யாருடன் கூட்டணி? புரியாத புதிர் 'சுதீஷ்'
தூத்துக்குடி : 2021- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சுதீஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை தேமுதிக ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும்.
அதனால் நாங்கள் ஆதரித்தோம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தேமுதிக எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது நல்லதுதான்.
நீட் அச்சத்தால் 15 மாணவர்கள் மரணம்.. தமிழக அரசே முழுக்காரணம்.. முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு!
கொள்கை
தேமுதிகவின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம். அன்னை மொழி கற்போம் என்பதுதான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
கட்சி தலைமை அறிவிக்கும்
2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை பொருத்தவரை நடிகர் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பிறகு பார்க்கலாம். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்திற்குள் செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொருத்து ஜனவரி மாதம் இறுதிக்குள் கட்சி தலைமையே அறிவிக்கும் என சுதீஷ் கூறினார்.
தேமுதிக அதிமுக கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தல், தமிழக இடைத்தேர்தல்களில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. இந்த நிலையில் அண்மையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்பினால், அதன்படி செயல்படுவோம் என்றார்.
ஜனவரியில் தெரியும்
எனவே வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றே தெரிகிறது. இல்லாவிட்டால் 3ஆவது அணி அமைய வாய்ப்பிருக்குமா என்றும் அரசியல் ஆலோசகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எதுவாகினும் வரும் ஜனவரி மாதம் அனைத்தும் தெரியவரும்.