ஒரே நாடு- ஒரே கலாசாரம் எனில் தமிழக வரலாறு இந்தியாவுக்கு உரியது இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி
தூத்துக்குடி: ஒரே நாடு, ஒரே கலாசாரம் என பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, கலாசாரத்தை இந்தியாவுக்கு உரியதாக பார்க்கவில்லையா? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோட்டி ஏற்க முடியாத பல கருத்துகளை கூறி வருகிறார். இந்த தேசத்தில் பல்வேறு கலாசாரங்கள் உள்ளன.
ஒரே நாடு, ஒரே கலாசாரம்
ஆனால் ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே நாகரிகம் என்கிறார் பிரதமர் மோடி. அப்படியானால் தமிழ் மொழி, தமிழக வரலாறு, தமிழர் பண்பாடு இவை எல்லாம் இந்தியாவுக்கு சொந்தமானது என மோடி நினைக்கவில்லையா?
தேவை இல்லை ஒற்றை சித்தாந்தம்
ஒற்றை சித்தாந்தம்தான் இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்த ஒற்றை சித்தாந்தத்தை தூக்கி எறிய வேண்டும். ஒற்றை சித்தாந்தம்தான் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்றால் அந்த ஒற்றை சித்தாந்தத்தை நாம் நிராகரிக்க வேண்டும்.
தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களைக் கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார் பிரதமர் மோடி. அப்படியான பிரதமர் மோடியின் எண்ணம் தவறானது. தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதுதான் வரலாறு. இந்த வரலாற்றை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
உப்பள தொழிலாளர்களுடன் உரையாடல்
இதையடுத்து உப்பளங்களை ராகுல் காந்தி பார்வையிட்டார். உப்பதள தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.