தூத்துக்குடி விஷவாயு தாக்கி 4 பேர் மரணம்: தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
தூத்துக்குடியில் கழிவு நீர் தொட்டியில் வேலை செய்த போது விஷ வாயு தாக்கி மரணமடைந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மரணமடைந்த 4 பேர் குடும்பத்தினருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மரணமடைந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலில் தொட்டிக்குள் இறங்கி இசக்கி ராஜாவும், பாலாவும் சுத்தம் செய்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தினேஷ், இருவரையும் அழைத்தபடியே தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியில் வராததால் பாண்டியும் உள்ளே இறங்கியதாகக் கூறப்படுகிறது.
வேலைபார்த்துக் கொண்டிருந்த 4 பேரும் தொட்டிக்குள் இருந்து வெளியே வராததால், வீட்டில் இருந்தவர்கள் உள்ளே பார்த்தபோது விஷவாயு தாக்கி அவர்கள் மயக்கநிலையில் இருந்தனர். உடனடியாக காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.
"மறமானம் மாண்ட.." லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி
நால்வரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வரவழைக்காமல் டிராக்டரில் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் தனியார் ஒருவரின் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கேள்விப்பட்டு நான் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.