திமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி
தூத்துக்குடி: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றினாலே போதும், தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மக்களின் தண்ணீர் பிரச்சினையை கூட தீர்க்க முடியாத அரசு தேவைதானா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கிடையே, தூத்துக்குடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மீனாட்சிபுரம், பசுவந்தனை, தீத்தாம்பட்டி, கழுகுமலை, பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று அவர் நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்த திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலே குடிநீர் பிரச்சினை தீர்ந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்..
சென்னையில் உச்சத்தை எட்டும் தண்ணீர் பஞ்சம்.. சமைக்க நீர் இல்லாததால் மூடப்படும் உணவகங்கள்!
மேலும், அதிமுகவை என்றுமே திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை என கூறிய கனிமொழி, திராவிட இயக்க கருத்துக்களில் நம்பிக்கை இல்லாமல் அதிமுகவினர் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதனால், அதிமுகவை திராவிட இயக்கம் என எவருமே ஏற்றுக் கொண்டதில்லை, எனவும் கனிமொழி கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசாக மாநில அரசு இருப்பதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரியை குறைக்க வலியுறுத்தி, திமுக எம். பி கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.