கருணாநிதியிடம் இருந்தது.. ஆனால் ஸ்டாலினிடம் அது இல்லை.. தமிழிசை நேரடி அட்டாக்
முக ஸ்டாலினின் பேச்சில் அரசியல் நாகரீகம் இல்லை என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: "கருணாநிதியின் பேச்சில் இருந்த நாகரீகம் ஸ்டாலினிடம் இல்லையே.. வெறும் அநாகரீகமாகதான் உள்ளது" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் ட்விட்டர் போர் நடத்தி கொண்டிருந்த தமிழிசை சவுந்தராஜன், தூத்துக்குடி போயும் ஸ்டாலினை விடவில்லை. அந்த தொகுதியில் வேட்பாளராக கால் வைத்ததில் இருந்தே திமுகவை சரமாரி கேள்வி கேட்டு கொண்டு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன் சொன்னதாவது: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் அதை எண்ணுவதற்கே ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுக்கு திமுக பதில் சொல்லியே ஆகணும். இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று சொன்னால் அதை மக்கள் கண்டிப்பாக நம்பமாட்டார்கள்.
ஒரு திருமண வீட்டில் இந்து மத சடங்குகளை கேவலமாக பேசியவர்தான் மு.க ஸ்டாலின். அதேபோலதான் கனிமொழியும். திருப்பதி உண்டியலை பாதுகாக்க முடியாத கடவுள் உங்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்று அன்று கேள்வி எழுப்பினார். இதே கனிமொழிதான், எந்த கடவுளுமே உண்மையில்லை என்று தி.க மாநாட்டில் பேசினார்.
வீரமணியோ இந்து மத உணர்வுகளை சிதைக்கும் அளவிற்கு கிருஷ்ணரை மிக மோசமாக விமர்சனம் செய்கிறார். நிலைமை வேறு மாதிரி போய்விட்டதும், நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் கிடையாது என்று ஒரேடியாக மாற்றி பேசுகிறார்கள்.
கருணாநிதி தன்னுடைய கருத்துக்களை மிக மிக நாகரீகமாக முறையில், அதே சமயம் எதுகை, மோனையுடன் வெளிப்படுத்துவார். ஆனால் ஸ்டாலின் அநாகரீகமாக வெளிபடுத்தி வருகிறார். இதனால் மக்கள் மதிப்பீட்டில் அவர் குறைந்து கொண்டுதான் வருகிறார்" என்றார்.