உள்ளாட்சி தேர்தலிலும் கூவத்தூர் பார்முலா.. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடித்த யோகம்.. செம கூத்து!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக பதவியேற்ற திமுக மற்றும் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவினர் சொகுசு வேனில் ஏற்றி சென்றதால் அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக பதவியேற்ற திமுக மற்றும் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவினர் சொகுசு வேனில் ஏற்றி சென்றதால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக,அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கூவத்தூர் பார்முலாவை பின்பற்றி மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலும் ஆட்சியமைப்பதற்காக அரசியல் கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் கூவத்தூர் பார்முலாவை பின்பற்ற தொடங்கிவிட்டனர் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 8 இடங்களையும், சிபிஐ.1 இடத்தினையும், அதிமுக 5 இடங்களையும், தேமுதிக 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடத்திலும் வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக இரு கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களை சார்ந்து உள்ளனர். இரு தரப்பினரும் சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி இன்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன், திமுகவினர், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை ஒரு சொகுசு வேனில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் திமுகவினர், அதிமுகவை மீறி வேனில் கவுன்சிலர்களை சொகுசு விடுதிக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது . இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எட்டையபுரம் சாலையில் அதிமுக, தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூவத்தூர் பார்முலாவை பின்பற்ற தொடங்கிவிட்டனர் தமிழக அரசியல் கட்சியினர்.