ம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது!
சென்னை: தாய் இல்லாத அந்த ஆட்டுக்குட்டிக்கு இப்போ எல்லாமே அந்த நாய்தான்.. நாயின் பாசத்தில் உருகி கிடக்கும் ஆட்டுக்குட்டிக்கு மனிதரின் உதவி தேவையே இல்லை என்று ஆகிவிட்டது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது வேம்பார் சண்முகபுரம். இங்கு வசித்து வருபவர் லிங்கராஜன். இவர் ஒரு கூலி தொழிலாளி. லிங்கராஜ் தன்னுடைய வீட்டில் ஆடு, நாய் வளர்த்து வருகிறார்.
இவரது இந்த நாய் 2 வாரத்துக்கு முன்பு குட்டி போட்டுள்ளது. அதேபோல, போன வாரம் ஆடும் ஒரு குட்டி போட்டது. ஆனால் ஆடு குட்டி போட்டதும் உடனே இறந்துவிட்டது.
இதனால் தாய் இல்லாத அந்த ஆட்டுக்குட்டியை நாய்தான் அரவணைத்து வருகிறது. அம்மா இறந்துவிட்டதால் இந்த ஆட்டுக்குட்டியும் நாயிடம் தாய் போல் பழகி வருகிறது. ஆட்டுக்குட்டிக்கு நாய், வேளாவேளைக்கு பால் கொடுத்து வருகிறது.
ஆட்டுக்குட்டிக்கு லிங்கராஜ் தனியாக பால் வாங்கி வைத்துள்ளார். ஆனால் ஆட்டுக்குட்டி அந்த பாலை குடிப்பது இல்லையாம். நேராக போய் நாயிடம் உரிமையாக பால் குடிக்க ஆரம்பித்து விடுகிறது.
இப்படி பெண் நாயிடம் இந்த ஆட்டுக்குட்டி நெருக்கமாக பழகி பால் குடித்து வளர்ந்து வருவதை அந்த பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். ரோட்டில் மனிதர்கள் அனாதையாக விழுந்து கிடந்தாலே ஒதுங்கி செல்லும் இந்த உலகத்தில், இப்படி ஒரு கரிசனமும், தாய்மையும் இந்த விலங்குகளிடம் வழிந்து வருவதை என்னவென்று சொல்வது.. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!