கனிமொழி உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.. கண்ணீர் கோஷம்.. சாத்தான்குளம் தந்தை, மகன் உடல் நல்லடக்கம்
தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த, சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கனிமொழி எம்.பி. உட்பட பல அரசியல் பிரமுகர்களும், வியாபாரிகளும் இதில் பங்கேற்றனர்.
Recommended Video
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர் சாத்தான்குளத்தில் ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும், பென்னிக்சுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும், போலீசார் கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில், அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு.. நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்
இரட்டை கொலை வழக்கு
இது தொடர்பாக காவல்துறையினர் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுமிகவும் குறைந்த நடவடிக்கை. எனவே இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யும் வரை இவர்களது சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று குடும்பத்தினர் கூறிவிட்டனர். நேற்று நள்ளிரவு வரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தந்தை மகன் இருவரும் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
சமாதானம்
இருப்பினும், அவர்களது உடல்களை வாங்குவதற்கு குடும்பத்தினர் மறுத்ததால் இறுதிச்சடங்கு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் அரசுத் தரப்பு மற்றும் வியாபார அமைப்பினர் பலரும் குடும்பத்தினரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாலும், மதுரை ஐகோர்ட்டு கிளை இந்த வழக்கை விசாரித்து வருவதால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், அவர்கள் உடலை பெற்றுக் கொள்வதாக கூறிய குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள்
இதையடுத்து சாத்தான்குளத்தில், காமராஜர் சிலைக்கு பின்புறமுள்ள அவர்களது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அஞ்சலிக்காக சிறிது நேரம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு மேல சாத்தான்குளம் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இருவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோஷம்
இறுதி நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதியின் எம்பி கனிமொழி, சட்டசபை உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். ஒரு டிஐஜி, 2 எஸ்பி, மற்றும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். "சிபிஐ விசாரணை வேண்டும்", "நீதி வேண்டும்" என்பது போன்ற கோஷங்களை இறுதி ஊர்வலத்தின்போது மக்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.