ரஜினி யாருன்னு கேட்டு அதிர வைத்த சந்தோஷ்... பைக் திருடலையாம்.. திருடு போனதை வாங்கி சிக்கிய பரிதாபம்!
ரஜினியை யார் என்று கேட்ட தூத்துக்குடி இளைஞர் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி: "நீங்க யாருன்னு" தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து ஒருத்தர் கேட்டாரே ஞாபகம் இருக்கா? அந்த இளைஞரை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். ஆனால் திருடியது சந்தோஷ் இல்லை என்றே முழு விசாரணைக்கு பிறகு தெரியவந்துள்ளது!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு பார்க்க சென்றிருந்தார்... ஆஸ்பத்திரியில் குண்டடி பட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியபடி வந்தார்... அப்போது அங்கு இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்... அவர் டக்கென ரஜினியை பார்த்து, "யார் நீங்கள், இங்கே எதுக்கு வந்தீங்க" என்று கேட்டார். இதை ரஜினிகாந்த் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.
இது அப்போது சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது. அந்த இளைஞர் பெயர் சந்தோஷ்... இது ரஜினிக்கே பெரும் அவமானமாகவும், கோபத்தையும் தூண்டியதாககூட சொல்லப்பட்டது.
|
ஏர்போர்ட்
அந்த கோபத்தில்தான் நேராக ஏர்போர்ட்டுக்கு வந்தவர், செய்தியாளர்களிடம் காட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்றும் செய்திகள் வந்தன.. ஆனால் தூத்துக்குடி சம்பவம், ரஜினி ஏர்போர்ட்டில் பேசியது இன்றுவரை நினைவில் உள்ள அளவுக்கு, அந்த இளைஞரை அதற்கு பிறகு எல்லாருமே மறந்து போய்விட்டனர்.. இப்போது அந்த இளைஞர் மீதுதான் திருட்ட கேஸ் ஒன்று பதிவாகி உள்ளது.
பைக்
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் சாம்குமார் என்பவர் தன் வீட்டு வாசல் முன்பு பைக்கை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.. 2 நாளைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றிருக்கிறார்.. விடிந்து வந்து பார்த்தால் பைக்கை காணோம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வடபாகம் போலீஸில் இதை பற்றி புகார் அளித்துள்ளர்.
கைது
போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மணி 23, சரவணன் 22, ஆகியோரை இந்த பைக் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இவர்கள் அனைவரும் கைது செய்தும் உள்ளனர்.. பைக் திருடியதில் சந்தோஷும் ஒருவர் என்பதால்தான் இந்த செய்தி பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது. தூத்துக்குடி சம்பவ வழக்கின் விசாரணைக்காக ரஜினிகாந்திடம் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த நிலையில், தூத்துக்குடி இளைஞர் கைதாகி உள்ளதும் பரபரப்பை தந்து வருகிறது.
நடந்தது என்ன?
ஆனால், இந்த சம்பவம் வேறு மாதிரியாகவும் கூறப்படுகிறது.. உண்மையிலேயே சந்தோஷ் அந்த பைக்கை திருடவில்லையாம்.. சம்பந்தப்பட்ட பைக் ஓனர் சாம்குமார் வீட்டு முன்பு எமஹா ஆர்.ஒன் 5 என்ற பைக்கை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்... சரவணன், விஜி என்ற 2 திருடர்கள் பைக்கை திருடி, அது விற்பனைக்கு இருப்பதாக OLX விளம்பரம் வெளியிட்டு உள்ளனர்.
விளம்பரம்
இந்த விளம்பரத்தை பார்த்த சந்தோஷ், அவரது நண்பர் மணி இருவரும் ஓஎல்எக்ஸ் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து, ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கை, ஆர்சிபுக் இல்லாமல் வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதனிடையே பைக்கை பறிகொடுத்த சாம்குமாரும் அதே விளம்பரத்தை பார்த்து, அதே செல்போன் நம்பருக்கு அழைத்து பேசியுள்ளார்.
விசாரணை
அப்போதுதான் திருடர்கள் பைக் விற்பனையாகிவிட்டது என்று சாம்குமாருக்கு தெரிவித்தனர்.. யார் வாங்கியது, அந்த பைக்கை என்னவிலை கொடுத்தாவது நான் வாங்கி கொள்கிறேன் என்று சாம்குமார் கேட்கவும்தான், சந்தோஷ் பற்றின விவரம் சொல்லி உள்ளனர்... சந்தோஷிடம் தன்னுடைய பைக் இருப்பது உறுதியானதும், சாம்குமார், வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில்தான் சந்தோஷ், மணி, சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்களாம்.. உண்மையிலேயே சந்தோஷ் பைக்கை திருடவில்லை.. இது சம்பந்தமான தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.!