நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டார்.. டிஎஸ்பி மீது பெண் எஸ்ஐ பரபர புகார்
டிஎஸ்பி முத்துக்குமார் மீது திருச்செந்தூர் பெண் எஸ்.ஐ புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி: "என் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டார் டிஎஸ்பி . அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்" என்று ஒரு பெண் எஸ்.ஐ. புகார் கொடுத்துள்ளார்.
திருச்செந்தூர் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக பணிபுரிபவர் சத்யபாமா!! சென்னை டி.ஜி.பி.அலுவலகத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிபவர் முத்துக்குமார். இவர்களுக்குள் நடந்த பிரச்சனைதான் இது!!
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெற்றதால் அப்போது பாதுகாப்பு பணிக்காக சென்றவர். இவருக்காக கோயில் மூலஸ்தான பகுதியில்தான் டியூட்டி போட்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறி குலசை ஸ்டேஷனில் ஒரு புகாரும் தந்திருக்கிறார் சத்யபாமா.
தொந்தரவு என்றேன்
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது: "கடந்த 20-ம் தேதி, கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அப்போது இரவு 11.30 மணி. 20 பேரை அழைத்து கொண்டு, டிஎஸ்பி, அவரது குடும்பத்தினருடன் ஏட்டு வெலிங்ஸ்டன் என்பவர் கோயிலை விட்டு வெளியேறினார். அதனால் அவரிடம், ஏன் இப்படி மொத்தமா எல்லாரையும் கூட்டிட்டு வருகிறீர்கள்? மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்குமே என்று கூறினேன்.
விபூதியை கொட்டினார்
உடனே ஏட்டு, தான் கூட்டி வந்தவர்களை மீண்டும் கோயிலுக்குள் கூட்டி கொண்டு போய் விட்டார். தரிசனம் முடிந்து மீண்டும் அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது டி.எஸ்.பி., முத்துக்குமார் "நீ பெரிய இவளா.." என்று என்னை கேட்டு, அவர் கையில் வைத்திருந்த திருநீரை என் கண்ணுக்குள் அள்ளி போட்டார். பிறகு என் நெஞ்சின் மீது கையை வைத்து தள்ளி விட்டார்.
காமிராவில் பதிவு
இதனால் நான் பக்கத்தில் இருந்த உண்டியல் மீது விழுந்துவிட்டேன். பிறகு எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதற்கு சாட்சி என்கூட ட்யூட்டி பார்த்த பியூலா செல்வக்குமாரி, முத்துமாலை போன்ற பெண் போலீஸ்கள்தான். அதுவும் இல்லாமல் இந்த காட்சிகள் எல்லாமே அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி இருக்கிறது. " என்று புகாரில் கூறியிருந்தார்.
ஒருமையில் பேசினார்
சத்யபாபா இப்படி ஒரு புகார் கொடுத்தது போலவே டிஎஸ்பி முத்துக்குமாரும் பதிலுக்கு ஒரு புகார் அளித்துள்ளார். அதில்,"கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் மரியாதை இல்லாமல் ஒருமையிலும், கெட்ட வார்த்தையிலும் சத்யபாமா பேசி கொண்டிருந்தார். இதனை பார்த்த நான், அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன்.
விபூதி கொட்டி விட்டது
பிறகு எங்கிருந்து டியூட்டிக்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரோ, " உனக்கு ஏன்டா நான் பதில் சொல்லனும்..?" என்று என்னையும் தகாத வார்த்தைகளால் பேச தொடங்கினார். அந்த நேரத்தில்தான் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்தது. அவர்கள் என் மீது விழுந்ததில், என் கையில் வைத்திருந்த விபூதி அவர் மீது கொட்டிவிட்டது.
மனைவியை அடித்தார்
திருநீறு கொட்டியதும் உடனே கோபமடைந்து கத்த தொடங்கிவிட்டார். என்னை தகாத முறையில் பேசியதால் என் மனைவி அவரை தட்டி கேட்டார். ஆனால் என் மனைவியின் தலை, முதுகிலும் பலமாக தாக்கிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டிஎஸ்பி கூறியுள்ளார்.
தனித்தனி புகார்
கோயில் வாசலில் சத்யபாமாவுக்கும், டி.எஸ்.பி., மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரியஸாக போனதை கண்ட தேவஸ்தான ஊழியர்களும் பொதுமக்களும்தான் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு தான் ஆளாளுக்கு தனித்தனியே புகாரும் அளித்துள்ளார்கள்.