ரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்? திருமாவளவன்
திருச்செந்தூர்: ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது என சிதம்பரம் எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.
பங்கேற்றது யார்
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டாக பிரிந்த காஷ்மீர்
இதில் ரஜினிகாந்த் பேசியபோது, அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன், அர்ஜூனனை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார்.
ஆச்சரியம் இல்லை
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான தொல் திருமாவளவன் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் மோடி- அமித்ஷாவை மகாபாரத்தில் இருந்து கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினி கருத்தில் எந்த ஆட்சேசனையும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.