"தைரியமிருந்தா, என் ஊருக்கு வாங்க".. சவால் விட்ட திமுக பிரமுகர்.. உடனே கிளம்பி வந்த 9 குண்டர்கள்!!
தூத்துக்குடி திமுக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்தனர் மர்மநபர்கள்
தூத்துக்குடி: "வாடா... வாடா.. என் ஏரியாவுக்கு வந்து பாருடா" என்று வடிவேலு ஒரு படத்தில் சவால்விடுவாரே.. அது மாதிரியே ஒரு சம்பவம் நடந்துள்ளது தூத்துக்குடியில்..!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அடுத்த உமரிக்காட்டை சேர்ந்தவர் எஸ்ஆர்எஸ் உமரிசங்கர். இவர் திமுகவின் மாநில மாணவரணி துணை செயலாளராக உக்ஷபாறுப்பில் உள்ளார்.
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு ஆறுமக நேரியில் திமுகவின் கிராம சபை கூட்டம் நடந்தது.. இதில் கலந்து கொண்ட உமரிசங்கர் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசியது போல தெரிகிறது.. அதாவது யாருக்காவது தைரியம் இருந்தால், என் ஊருக்கு வந்து பாருங்க என்ற ரீதியில் சவால் விடுத்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சாயங்காலம் உமரிசங்கர் வீட்டுக்கு 9 பேர் கொண்ட கும்பல் புகுந்துவிட்டதாம்.. அவர்கள் கையில் கத்தி, அரிவாள் போன்றவை இருந்துள்ளன.. அந்த கும்பல் உமரிசங்கரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளது.. அங்கு நின்றிருந்த பைக்கையும் உடைத்துள்ளது. பிறகு கார் முழுவதும் முட்டைகளை தூக்கி வீசி சேதப்படுத்தியது.. இவ்வளவு அமர்க்களத்தையும் செய்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது.
இறுதியில், நடந்த சம்பவம் குறித்தும், தன்னுடைய காரை அடித்து நொறுக்கியது குறித்தும் ஏரல் ஸ்டேஷனில் உமரிசங்கர் புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணையை ஆரம்பித்தனர்.. மர்மகும்பல் யாராக இருக்கும் என்று என்பதை கண்டுபிடிக்க முயன்றபோது, உமரிசங்கர் வீட்டில் சிசிடிவி கேமிராவே இல்லையாம்... அதனால் அவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் கூட்டத்தில் உமரிசங்கர் சவால் விடுத்ததால்தான் இந்த மர்ம கும்பல் வந்ததா? அல்லது சொந்த கட்சி கோஷ்டி பூசல் காரணமாக, வந்து சென்ற கும்பலா என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.