"ரொம்ப நல்லவர்".. கிராமத்தினர் கண்ணீர்.. 21 குண்டுகள் முழங்க.. போலீஸ்காரர் சுப்பிரமணியம் இறுதிசடங்கு
தூத்துக்குடி: குண்டுவீச்சில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தூத்துக்குடி போலீஸ்காரர் சுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.. "ரொம்ப நல்லவர்.. கண் முன்னாடியே மிடுக்கென நடமாடி கொண்டிருந்தவர், இப்படி பொசுக்கென கண்ணை மூடிட்டாரே" என்று சுப்பிரமணி உடலுக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
துரைமுத்து என்ற ரவுடியை தூத்துக்குடி போலீசார் தேடி கொண்டிருந்தனர்.. அவர் இரட்டை கொலை உட்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்.. அவர் வல்லக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால் அவரை பிடிக்கும் பணியில் போலீசாரும் ஈடுபட்டிருந்தனர்... அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.. தொடர்ந்து தேடுதல் பணி அங்கு நடந்தது.. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பியும் விரைந்து வந்தார்.
குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார்.. அதன்படியே தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு துரைமுத்து பிடிபட்டாலும், பலத்த காயங்களுடன் இருந்தார்.. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிரும் பிரிந்தது..
சுப்பிரமணி இறப்பு காவல்துறையினருக்கு பெரும் அதிர்ரச்சியை ஏற்படுத்தியது.. அவரது சடலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. முன்னதாக, அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உட்பட காவல் துறை உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்... சுப்பிரமணியன் உடலுக்கு தென்மண்டல ஐஜி முருகன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர். அதேபோல் பொதுமக்கள், உறவினர்கள், என ஒட்டுமொத்த கிராமமும் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியது.
கொரோனாவில் உயிரிழந்த செய்தியாளர் ஜான் கென்னடி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு - தமிழக அரசு
உயிரிழந்த சுப்பிரமணியன் கடந்த 2017-ல்தான் போலீஸ் வேலைக்கே வந்துள்ளார்.. தன்னுடைய முதல் வேலையை ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனில்தான் தொடங்கியுள்ளார். வேலையில் சேர்ந்து 3 வருஷங்கள் ஆன நிலையில், சில தினங்களுக்கு முன்புதான், தனிப்படை பிரிவில் போலீசாக பணிமாற்றம் செய்யப்பட்டாராம்.
இவர் ரொம்ப நேர்மையானவர் என்கிறார்கள் கிராம மக்கள்.. பணிக்கு தவறாமல் வருபவரும்கூட... அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் வெகு இயல்பாக பேசுவாராம்.. "கண் முன்னாடியே மிடுக்கென நடமாடி கொண்டிருந்தவர், இப்படி பொசுக்கென கண்ணை மூடிட்டாரே" என்று கண்ணீர் மல்க கிராம மக்கள் கூறுகிறார்கள்!