தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு
தூத்துக்குடி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாகின. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் அதிமுக பிரமுகர் நடராஜன் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை சீமான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீமான் மீது தென்பாகம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திக்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?
வழக்கு பதிவு ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் தர சீமானுக்கு ஒரு நபர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையடுத்து ஒரு நபர் கமிஷன் முன்பாக கடந்த 16-ந் தேதி சீமான் ஆஜரானார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
அச்சந்திப்பின் போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அலிபாபாவும் 40 திருடர்களும் போல என ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார் சீமான். இதனையடுத்து சீமானின் கருத்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவமதிப்பதாக கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.