திருச்செந்தூர் குருபகவான் பரிகார ஸ்தலம் - தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்
திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து
தூத்துக்குடி: திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.
குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம். இது வியாழ தலம். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும். மீனவர் குலத்தில் பிறந்த இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், இன்றைக்கும் மீனவர்கள் முருகனை, மச்சான் சாமி என்று அழைக்கின்றனர்.
சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
தட்சன் யாகம்
தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை.
குருபகவான் தவம்
தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே கலக்கத்துடன் சென்று கொண்டிருந்தார் குருபகவான்.
சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார் குருபகவான். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி தவத்தில் மூழ்கினார்.முருகன் அவதாரம்
சூரனை அழிப்பதற்காகவே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு. முருகனுக்கு உதவி செய்யஅன்னையின் சிலம்பில் இருந்து வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்கள் தோன்றினர்.
படையோடு புறப்பட்ட முருகன்
யுத்தம் செய்வதற்கான நேரம் வந்தது. முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். எதிரியைத் தாக்குவதற்கு முன்பு, அவனது பலம் பலவீனம் என்ன என்பதை அறிந்துகொண்டு போருக்குச் செல்வதே விவேகமான செயல். நாமும் சூரபத்மனைப் பற்றியும் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பலம் பலவீனத்தை அறியவேண்டும். அதன்பின் போரைத் தொடங்கலாம் என்றார் குமரன்.
தேவசேனாதிபதி முருகன்
தேவ சேனாதிபதியாக முருகவேள் நியமிக்கப்பட்டுவிட்டார். அவருக்குத் துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்கத் தயாராக இருந்தார்கள். தேவாசுர யுத்தம் மூளப்போகிறது. மந்திர ஆலோசனை நடந்தது. தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.
கந்தன் வைத்த வேண்டுகோள்
குரு பகவான் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், அங்கிருந்து விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள். கருணை தவழும் முகமும், சத்துவமான சாந்த குணமும் கொண்டவர்கள். காவி உடை அணிந்த நாம் அடியவர்களின் துன்பத்தைப் போக்குபவர்கள். அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் நாம் தூய திருநீறு அணிந்திருப்பவர்கள்.யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்று வரம் அளித்துச் சென்றார்.
புத்திரபாக்கியம் தரும் திருச்செந்தூர்
அதுமுதல் திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவேதான் குரு பரிகார தலமாக திருச்செந்தூரை பரிந்துரை செய்கின்றனர் ஜோதிடர்கள்.
மச்சான் சாமி
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளையை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும். சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.