அடேங்கப்பா... நாலு கால் பாய்ச்சலில் தமிழக பாஜக... 4 மொழிக் கொள்கையை கேள்விபட்டிருக்கீங்களா?
தூத்துக்குடி: தமிழக பாஜகவைப் பொறுத்தவரையில் 4 மொழிக் கொள்கையை கடைபிடிப்பதாக அதன் துணைத் தலைவரும் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் பாஜக இதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
தாய்மொழிக் கல்வியுடன் இந்தியை படிக்க வேண்டும் என்கிறது பாஜக. அண்மையில் இந்தி தினத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது; உள்ளூர் மொழிகளுடன் சேர்த்து இந்தியையும் வளர்க்க வேண்டும் என கூறியிருந்தார். இது சர்ச்சைக்குரியதானது.
கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள்- அகாலி தளம் மோதல் ஏன்?
தூத்துக்குடி ஆலோசனை கூட்டம்
இதனிடையே தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவரும் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் பாஜகவில் இணைந்தனர்.
இந்தி எதிர்ப்பு-வெறுப்பு இல்லை
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக அலை வீசுகிறதோ... பாஜக அலைவீசுவதால் பல்வேறு தரப்பினர் இணைந்து கொண்டிருக்கின்றனர். தமிழக பாஜகவைப் பொறுத்தவரை தமிழுக்குத்தான் முக்கியத்துவம். அதற்காக இந்திய எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை. திமுகதான் இதைவைத்து அரசியல் செய்கிறது.
பாஜகவின் 4 மொழி கொள்கை
தமிழ் நமது தாய்மொழி. அதனால்தான் முன்னுரிமை தருகிறோம். தமிழ் மொழி நமது தாய்மொழி. ஆங்கிலம் நட்பு மொழி. சமஸ்கிருதம் நமது வேத மொழி. இந்தி மொழி படிக்க வேண்டிய மொழி. இதனைத்தான் பாஜக செயல்படுத்தி வருகிறது.
தோற்றுப் போன பொன்னாருக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் போட்டியிடுவேன். இந்த தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே போட்டியிட்டிருக்கிறார். இங்கு போட்டியிட்டு பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இதனால் அவருக்குத்தான் அங்கு வாய்ப்புகள் அதிகம். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் கன்னியாகுமரியில் போட்டியிடுவேன்.
அதிக இடங்களில் போட்டியிடுவோம்
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. இதனால் தேர்தலில் அதிக இடங்களை கேட்டுப் பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி; அதிமுக- பாஜக கூட்டணிதான். மூன்றாவது அணி என்பதெல்லாம் இப்போதைக்கு இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில்தான் யார் பிரிவார்கள்? யார் சேருவார்கள்? என்பதும் தெரியவரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.