திமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை.. வெற்றி பெற வைக்க துடிக்கிறார். முதல்வர் பழனிச்சாமி பகீர்
தூத்துக்குடி: அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், திமுக வெற்றி பெற வேண்டும் என்பதே டிடிவி தினகரனின் எண்ணம் என்றும் அதற்காக திமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டி உள்ளார்.
ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வசவபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் தினகரனுக்கு பதவி கொடுத்தது. அம்மாவின் இந்த இயக்கம் தான் அவருக்கு விலாசத்தை கொடுத்தது.
அவரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கிய கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அந்த இரட்டை இலை சின்னம் தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. நாட்டு மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியது.
மதுரை தனியார் ஓட்டலில் தங்கியுள்ள தங்க தமிழ் செல்வனின் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை
அந்த இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு போட்டவர் டிடிவி தினகரன். திமுக ஒரு தீயசக்தி அதை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என புரட்சி தலைவர் எம்ஜிஆர் சொன்னார். அப்படிப்பட்ட இயக்கத்துடன் கூட்டணி வைத்து தினகரன் செயல்படுகிறார்.
மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக இயக்கத்தை அழிக்க வேண்டும். எதிரியோடு சேர்ந்து அழிக்க வேண்டும் என தினகரன் எண்ணுகிறாரே, இது துரோகச் செயல் அல்லவா? அப்படிப்பட்ட துரோகம் செய்யும் தினகரன் மற்றும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.