களைகட்டிய முருகன் கோவில்கள்.. கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர்: தமிழகத்தில் முருகன் கோவில்களில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. வரும் 20-ந் தேதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக தமிழக கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் இந்த ஆண்டு தடைபட்டுப் போயின. இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, முருகன் கோவில்களில் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் இன்று காலை தொடங்கியது. பக்தர்களும் முருகன் கோவில் மற்றும் பல்வேறு ஊர்களில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான வரும் 20-ந் தேதியன்று அனைத்து முருகன் கோவில்களும் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: பழனி, பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
இதர கந்த சஷ்டி விழாவின் 5 நாட்களிலும் முருகன் கோவில்களில் சுமார் 10,000 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் முருகன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் யூ டியூப் இணையதளங்கள் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.